சகல ஐஸ்வர்யம் தரும் சக்குளத்து பகவதி அம்மன் கோவில் நாரி பூஜை!

எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சக்குளத்துக்காவில் குறிப்பிடத்தக்கக்கது நாரி பூஜை.

கேரள மாநிலத்தில் உள்ள சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த ஆலயம், பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது.

Woman is Goddess Naari Puja in Kerala Chakkulathukavu Bhagavathi Amman Temple

சக்குளத்துக்காவில் குறிப்பிடத்தக்கக்கது நாரி பூஜை. நாரி பூஜை நாளில் இந்தியாவில் உள்ள பிரபலமான பெண்களை விருந்தினராக அழைத்து பூஜை செய்கிறார்கள். அலங்கரித்த இடத்தில் அமரவைத்து மிகவும் பக்தியுடன் பூஜை செய்யப்படுகிறது. பெண்களை மரியாதை செய்யுமிடத்தில் தேவதைகள் ஆனந்தமடைகிறார்கள் என்பது நம்பிக்கை. பெண்களைச் சக்தியும் நன்மையையும் நிறைந்தவர்களாக நினைக்க வேண்டுமென்று இந்தப் பூஜை நினைவுபடுத்துகிறது. எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒரு சமயம் ஒரு வேட்டைக்காரன் காட்டினுள் விறகுவெட்டப் போனான். அவனைக் கொத்துவதற்காக வந்த பாம்பை வெட்டினான். அந்தப் பாம்பு சாகவில்லை. அது ஒரு புற்றின் முகட்டில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்த வேடன் மறுபடியும் பாம்பை அடிக்கச் சென்றான். அப்பொழுது அந்தப் புற்று இரண்டாகப் பிளந்து தண்ணீர் வழிந்தது. அதைப்பார்த்து திகைத்து நின்ற வேடனின் முன் முனிவர் ஒருவர் தோன்றினார். அவர் அந்த வேட்டைக்காரனிடம் பயப்பட வேண்டாம் என்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாரத முனிவர்

நாரத முனிவர்

நீர் புற்றுக்குள் பராசக்தி ஜலசயனம் நடத்துகிறார் என்றும் புற்றை உடைத்துப் பார்த்தால் அதற்குள் ஒரு கடவுள் சிலை இருக்குமென்றும் முனிவர் கூறினார். அந்தச் சிலையை வனதுர்க்கையாக ஆராதிக்க வேண்டுமென்றும் அப்படிச் செய்தால் புண்ணியம் கிடைக்குமென்றும் கூறினார். பிறகு அவரே புற்றை உடைத்துச் சிலையை வெளியே எடுத்தார். திடீரென முனிவர் மாயமாக மறைந்துபோனார். அன்று இரவு வேட்டைக்காரனின் கனவில் முனிவராக வந்தவர் நாரத முனிவர் என்று ஒரு அசரீரி கேட்டது. புற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் தெய்வச் சிலைதான் சக்குளத்துக்காவில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை.

பெண்களின் சபரிமலை

பெண்களின் சபரிமலை

பம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன், சக்குளத்துக்காவு பகவதி அம்மன் எழிலாக அருள்பாலிக்கிறாள். பெண்கள் பலரும், இருமுடி கட்டி விரதம் இருந்து இந்த அம்மனை தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கு நடைபெறும் பொங்கல் விழா உலக பிரசித்தி பெற்றது.

உணவு படைத்த வேடன்

உணவு படைத்த வேடன்

புற்றில் இருந்து சிலை கண்டெடுக்கப்பட்ட பிறகு வேட்டைக்காரனும் அவனுடைய குடும்பத்தினரும் தினசரியும் அவர்களால் முடிந்த அளவு சமைத்து தேவிக்கும் படைத்து வந்தனர். ஒருநாள் காட்டுக்குள் போனதில் எதுவும் கிடைக்கவில்லை தாமதமாகவே, சரியான நேரத்துக்குள் தேவிக்குச் சாப்பாடு படைக்க முடியவில்லையே என வருத்தத்துடன் வீடு திரும்பினர்.

அம்மன் அருள்

அம்மன் அருள்

அங்கே விதவிதமாக உணவு வகைகள் இலைகளில் பரிமாறப்பட்டிருந்ததைப் பார்த்து அவர்கள் தேவியின் அருளைப் புரிந்துகொண்டனர். அப்போது அம்மனின் குரல் ஒலித்தது. எந்தத் துன்பத்திலும் எனக்கு உணவு படைத்த உங்கள் நல்ல மனதைப் பாராட்டுகிறேன். உங்களது துன்ப நேரங்களில்கூட என்னைக் கைவிடாமல் பார்த்துக்கொண்டீர்கள். பக்தி நிறைத்த மனதுடன் யார் எங்கே நின்று அழைத்தாலும் நான் அருள்புரிவேன் என்று அசரீரி கேட்டது. இந்த நினைவாகத்தான் சக்குளத்துக்காவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து தேவியும் பொங்கலிடுவதாக நம்பப்படுகிறது.

கார்த்திகை பொங்கல் விழா

கார்த்திகை பொங்கல் விழா

சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் நின்றபடி, புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரியதரிசி, சுப முகூர்த்த வேளையில் பொங்கல் வைப்பதற்கான அடுப்பில் தீயை பற்ற வைத்து தொடங்கி வைப்பார். அப்போது பருந்து ஒன்று கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும்.

லட்சக்கணக்கான பெண்கள்

லட்சக்கணக்கான பெண்கள்

லட்சக்கணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டுகளை எடுத்துச்சென்று நைவேத்திய தீர்த்தம் தெளிப்பார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மார்கழி திருவிழா

மார்கழி திருவிழா

மார்கழி மாதம் திருவிழா காலங்களில் பெண் பக்தர்கள் 12 நாட்கள் விரதம் இருந்து சபரிமலையை போல் இருமுடி கட்டி வந்து தேவியை வழிபடுகிறார்கள். குழந்தைகளின் ஆயுள் - ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கும், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலசம் ஆகிய பூஜைகள் உண்டு. அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது வேறு எங்கும் நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள். அன்றைய தினத்தில் தங்கத் திருவாபரணங்கள் மேள-தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தேவிக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

நோய் தீர்க்கும் தீர்த்தம்

நோய் தீர்க்கும் தீர்த்தம்

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் வெள்ளிக்கிழமை அன்று தேவியை கோவிலுக்கு வெளியே எழுந்தருளச் செய்து, ஜாதி - மத பேதம் இன்றி சர்வமத பிரார்த்தனை நடைபெறுகிறது. இது ஐஸ்வரியத்துக்கு வழிகாட்டுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த தீர்த்தத்தைக் குடித்தால் பலவித நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

மது அடிமைகளுக்கு விடியல்

மது அடிமைகளுக்கு விடியல்

குடி போதைக்கு அடிமையானவர்களுக்கு சக்குளத்துக்காவு கோயில் சரணாலயமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் இவர்களுக்காகச் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த நாளில் சத்யப்ரித பூஜை நடத்தப்படுகிறது.

நாரி பூஜை

நாரி பூஜை

தனுர் மாதம் ஒன்றாம் நாள் தொடங்கி பன்னிரண்டு நாட்கள் விரதம் இருந்து திருவிழா நடத்துகின்றனர். தனுர் மாதமான மார்கழி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாரி பூஜை செய்யப்படுகிறது. உலகில் எங்கும் இல்லாத ஒரு சம்பிரதாயமாக இக்கோவிலில் நாரி பூஜை நடக்கிறது. இந்த ஆண்டின் நாரி பூஜை 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பெண்களை பீடத்தில் அமரச் செய்து, தேவியாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குகிறார்கள். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, December 14, 2019, 12:50 [IST]
Desktop Bottom Promotion