Mutton Leg Soup: வாரத்துக்கு 2-3 முறை ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!

Mutton Leg Soup Benefits In Tamil: குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், மழையும் அவ்வப்போது வெளுத்து வாங்குகிறது. இப்படியான சூழ்நிலையில் நிறைய பேர் அடிக்கடி சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனையால் அவதிப்படுவார்கள். இந்நிலையில் இப்பிரச்சனைகளுக்கு உடனே மருந்து, மாத்திரைகளைப் போடாமல், நம் பாட்டிமார்கள் கூறுவது போன்று நல்ல காரசாரமான சூப் குடித்தால், இதமாக இருப்பதோடு, நல்ல நிவாரணமும் கிடைக்கும்.

அதுவும் இப்படி சளி பிடித்திருக்கும் வேளையில் ஆட்டுக்கால் சூப் குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். முக்கியமாக ஆட்டுக்கால் நாம் நினைத்திராத அளவில் ஏராளமான நன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடியது. சொல்லப்போனால் குளிர்காலத்தில் வாரம் 2 முறை ஆட்டுக்கால் சூப் குடித்து வந்தால், பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Doctor Reveals The Surprising Health Benefits of Mutton Leg Soup

இப்படிப்பட்ட ஆட்டுக்கால் சூப்பை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து டாக்டர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் தனது இணையதள பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார். அது என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஆட்டுக்காலில் உள்ள சத்துக்கள்

அதில் அவர் கூறியதாவது, "ஆட்டுக்காலில் எலும்பு, எலும்பு மஜ்ஜை, கார்டிலேஜ் என்னும் இணைப்புத்திசுக்கள் போன்றவை உள்ளன. இதில் ஆட்டுக்காலின் எலும்பில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு தாது உப்புக்கள் உள்ளன. எலும்பு மஜ்ஜையில் இரும்புச்சத்து, ஜிங்க், செலினியம், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இணைப்புத்திசுவில் குளுக்கோசமைன், கான்ட்ராடின் போன்ற வேதிப்பொருட்களும் உள்ளன." என்று டாக்டர் கூறினார்.

சூப்பில் உள்ள சத்துக்கள்

சூப்பில் பெரும்பாலும் தண்ணீர் இருக்கும். அதுமட்டுமின்றி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் போன்ற மசாலா பொருட்களும், வெங்காயம், தக்காளி, பூண்டு போன்ற காய்கறிகளும் இருக்கும். இவை அனைத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் போன்றவை அதிகம் இருக்கும்.

இந்த பொருட்கள் மற்றும் ஆட்டுக்கால் என அனைத்தையும் நீரில் போட்டு நன்கு மணிக்கணக்கில் கொதிக்க வைக்கும் போது, இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீரில் இறங்கும். இந்த சூப்பை குடிப்பதனால் ஜீரண மண்டலத்தில் ஈஸியாக செரிமானமாகும் மற்றும் அதில் உள்ள சத்துக்கள் குடலால் எளிதில் உறிஞ்சப்படும். இதன் மூலம் உடலுக்கு நிறைய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும்.

எனவே எவ்வளவுக்கு எவ்வளவு சூப்பை கொதிக்க வைக்கிறோமோ, அந்த அளவுக்கு சூப்பில் சத்துக்கள் அதிகமாகும். ஆகவே எப்போது சூப்பை தயாரித்தாலும், நீண்ட நேரம் கொதிக்க வையுங்கள். குறைந்தது 1 மணிநேரமாவது குறைவான தீயில் வைத்து கொதிக்க வையுங்கள். இன்னும் 4-5 மணிநேரம் கொதிக்க வைத்தால், இன்னும் நிறைய சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும் என்றும் டாக்டர் கூறினார்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. எலும்பு மற்றும் மூட்டுகள் வலுவடையும்

ஆட்டுக்காலின் எலும்பு, எலும்பு மஜ்ஜையில் உள்ள சத்துக்கள் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு மிகவும் இன்றியமையாதது. அதுவும் இதன் இணைப்புத்திசுவில் உள்ள வேதிப்பொருட்கள் எலும்புகள் தேய்மானமடைவதை தடுக்கும் பண்பைக் கொண்டது. எனவே இந்த ஆட்டுக்கால் சூப்பை வயது அதிகரிக்கும் போது குடித்து வந்தால், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் குறையும். முக்கியமாக ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சூப்பை குடிப்பது மிகவும் நல்லது. என்று டாக்டர் கூறினார்.

2. குடல் ஆரோக்கியம் மேம்படும்

ஆட்டுக்கால் சூப்பை தொடர்ந்து குடித்து வரும் போது, அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்களால், மலச்சிக்கல் பிரச்சனை வராது மற்றும் குடலின் உட்பகுதியில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும். அதுமட்டுமில்லாமல் குடல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் குடிப்பது நல்லது. மேலும் இந்த சூப்பில் உள்ள பல்வேறு பொருட்கள் குடலின் செரிமானத்தை ஊக்குவித்து, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும் என்று டாக்டர் கூறினார்.

3. மூளையின் செயல்திறன் மேம்படும்

ஆட்டுக்காலின் இணைப்புத்திசுவில் உள்ள வேதிப்பொருட்கள் உடலினுள் சென்றதும் கிளைசீன் என்னும் வேதிப்பொருளாக மாறும். இந்த வேதிப்பொருள் நமது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸடையச் செய்யும். இதன் மூலம் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, மூளையின் நரம்பு செல்களுக்கு இடையேயான சிக்னலை அதிகரித்து, மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். இதன் மூலம் வேலையில் முழு கவனத்தை செலுத்தி சிறப்பாக செயல்பட முடியும் என்றும் டாக்டர் கூறினார்.

4. எடை இழப்புக்கு உதவும்

ஆட்டுக்கால் சூப் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவாக ஆட்டுக்கால் சூப் குடிக்கும் போது பசி குறைவதால், உண்ணும் உணவுகளின் அளவும் குறையும். எனவே உடலினுள் செல்லும் கலோரிகளின் அளவு குறைந்து, உடல் எடை குறையவும் உதவி புரியும். அதுவும் எடையைக் குறைக்க நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்குமாறான டயட்டில் இருப்பவர்கள், ஆட்டுக்கால் சூப் குடித்து வருவது நல்லது. இதனால் பசியும் கட்டுப்படும், பல்வேறு நன்மைகளும் கிடைக்கும் என்று டாக்டர் கூறினார்.

5. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஆட்டுக்கால் சூப்பில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் போன்றவை உடலினுள் ஏற்படும் வீக்கம்/அழற்சியைக் குறைக்கும். நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், அல்சைமர், நாள்பட்ட ஆர்த்ரைடிஸ், இதயம் தொடர்பான பல்வேறு நோய்கள் கட்டுப்படும். அதுவும் இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் என்றும் டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! இந்த குளிர்காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், வாரத்திற்கு 2-3 முறை ஆட்டுக்கால் சூப்பை குடித்து, ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion