'சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால், பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்?!'

By Maha

Diabetes diet and food tips
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பார்கள். எதையும் சாப்பிட பயப்படுவார்கள். 'எனக்கு ஷுகராச்சே...' என்ற வசனத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு மற்றவர்களைப் போல் எல்லாமே சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். இப்படி அவர்கள் ஆசைபடுவது தவறில்லை, நிச்சயமாக அவர்களும் எல்லாமே சாப்பிடலாம்தான். ஆனால் அப்படி சாப்பிட நினைப்பவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது. இப்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்னவெல்லாம் பயப்படாமல் சாப்பிடலாம் என்று பார்க்கலாமா...

1. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோறு சாப்பிட பயப்படுவார்கள். அவர்கள் குத்தரிசி, சம்பா, பச்சையரிசி என எந்த அரிசியை உண்டாலும் அவை ஒரே மாதிரியே இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே அவர்கள் எந்த வகை சாதத்தை உண்டாலும், அளவோடு சாப்பிட வேண்டும். சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டாலும்கூட சர்க்கரை அளவு கட்டுப்படப் போவதில்லை. அதிலும் கார்போஹைட்ரோட்தான் அதிக அளவு உள்ளது.

பிரபல நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் தமிழ்ச் செல்வன் அடிக்கடி இப்படி சொல்வார்: 'இங்க தமிழ்நாட்ல இருக்கிறவனுக்கு சர்க்கரை வியாதி வந்தால் சப்பாத்தி சாப்பிடறான்... பஞ்சாப்காரனுக்கு சர்க்கரை வியாதி வந்தா என்னய்யா சாப்பிடுவான்?!... அவரவர் பிறந்த மண்ணில் என்னை விளைகிறதோ அவற்றைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. ஆனால் அதை சரியான முறையில் சாப்பிடுங்கள்' என்பார்.

2. நீரிழிவுள்ளவர்கள் எந்த மாவில் தயாரித்த தின்பண்டங்களையும் உண்ணலாம். ஆனால் அதிலும் ஒரு அளவு வேண்டும்.

3. அதிலும் சோற்றுடன் நார்ப்பொருள் அதிகம் நிறைந்துள்ள காய்கறிகளை சேர்த்து உண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காது. அதிலும் எளிதில் கரையக்கூடிய நார்ப்பொருளாக இருந்தால் நல்லது. மேலும் அவர்கள் கடலை, பயறு, பருப்பு, சோயா போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

4. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவைத் தவிர மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸாக இனிப்பில்லாத பிஸ்கட்டை வாங்கி சாப்பிடுவர். ஏனென்றால் அதைச் சாப்பிட்டால் எதுவும் ஏற்படாது என்ற நம்பிக்கை,

ஆனால் உண்மையில் அதையெல்லம் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் மாவுப்பொருள் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதைவிட பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, அன்னாசி, மாம்பழம் மற்றும் காய்கறிகளில் வெள்ளரி, கேரட் போன்றவற்றை சப்பி சாப்பிட்டால், பசியும் அடங்கும், சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது. எதை உண்டாலும் எவ்வளவு உண்கிறோம் என்பதே முக்கியம்.

5. கிழங்குகளில் வத்தளைக் கிழங்கு இனிப்புக் கூடியது. ஆனால் அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்ற கிழங்குகளை விட குறைவானது. மேலும் இதில் கரட்டீன் சத்து இருப்பதால் மற்றக் கிழங்குகளை விட மிகவும் சிறந்தது. மரவள்ளிக் கிழங்கு கூட சாப்பிடலாம், ஆனால் அதில் மாப்பொருளை விட வேறு எதுவும் இல்லை. எனவே அவற்றை சற்று அளவோடே சாப்பிடலாம்.

ஆகவே நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு உண்டாலும் அளவோடும், மாவுப்பொருள் இருக்கும் உணவை, எதனோடு உட்கொள்கிறீர்கள் என்பதையும் முக்கியமாக நினைவில் கொண்டும் உண்ண வேண்டும்!

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, June 9, 2012, 11:22 [IST]
Desktop Bottom Promotion