தேர்வு நேரத்தில் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த உணவுகளை அதிகமா கொடுங்க..

Memory Boosting Foods In Tamil: அரையாண்டு தேர்வு நெருங்கி கொண்டிருக்கிறது. உங்கள் பிள்ளைகள் தேர்வு நெருங்கினால் மட்டும், அதிகம் பதட்டமடைந்து, படித்ததை எல்லாம் மறந்துவிடுகிறார்களா? தேர்வு நேரத்தில் உங்கள் பிள்ளைகளை ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

அப்படியானால் அதற்கு அவர்களின் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நினைவாற்றலை அதிகரிக்க எந்த உணவுகளை கொடுப்பது என்று தெரியாமல் உள்ளனர். மேலும் அதை தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றனர்.

Ayurvedic Doctor Lists Foods To Boost Kids Brain Health And Memory Power During Exam Time

ஆயுர்வேத மருத்துவரும், ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர் மைதிலி அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தேர்வு நேரத்தில் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் எவையென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தேர்வு நேரத்தில் வைட்டமின் பி12, புரோட்டீன் போன்றவை அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இப்படி சேர்க்கும் போது உடல் சோர்வும் குறையும், பாடத்தை கூர்ந்து கவனிக்கும் திறனும் அதிகரித்து, ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று டாக்டர் கூறினார்.

1. வால்நட்ஸ்

வால்நட்ஸை தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதுவும் தேர்வு நேரத்தில் மட்டுமின்றி, தினமும் குழந்தைகளுக்கு 3-4 வால்நட்ஸை கொடுக்க வேண்டும். இப்படி கொடுக்கும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும், கவனிக்கும் திறன் அதிகரிக்கும், செறிவாற்றல் அதிகரிக்கும் என்று டாக்டர் கூறினார்.

2. வல்லாரை கீரை

அடுத்ததாக குழந்தைகளுக்கு வல்லாரை கீரையை கொடுக்கும் போது, அது ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, பிற்காலத்தில் ஞாபக மறதி நோய்களான அல்சைமர், டிமென்ஷியா வரும் அபாயமும் குறையும். அதோடு செறிவையும் அதிகரிக்கும் திறன் உள்ளது. இப்படிப்பட்ட வல்லாரை கீரையை தேர்வு நேரத்தில் வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுங்கள். அதுவும் 2 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்குமாறு டாக்டர் கூறினார்.

3. செவ்வாழை

தேர்வு நேரத்தில் குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றொரு உணவுப் பொருள் தான் செவ்வாழை. ஏனெனில் செவ்வாழையில் வைட்டமின் பி6 என்னும் பைரிடாக்ஸின் உள்ளது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் முக்கியமான சத்து உள்ளது. எனவே செவ்வாழை தேர்வு நேரங்களில் மட்டுமின்றி, தினமும் ஒன்று சாப்பிட கொடுத்து வாருங்கள் என்று டாக்டர் கூறினார்.

4. காளான்

ஞாபக சக்தியை அதிகரிக்க குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய மற்றொரு உணவுப் பொருள் தான் காளான். இந்த காளானில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. வைட்டமின் பி12 உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் மூளையின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

5. பன்னீர்

அடுத்ததாக பன்னீரையும் தேர்வு எழுத செல்லும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும். இதில் வைட்டமின் பி12 மட்டுமின்றி, புரோட்டீனும் அதிகம் உள்ளது. பொதுவாக தேர்வு நேரத்தில் அதிக நேரம் கண் விழித்து படிக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் பன்னீரை அதிகம் கொடுக்கும் போது, மூளையின் செயல்பாடு சிறப்பாக இருப்பதோடு, உடல் சோர்வும் தடுக்கப்படும். எனவே ஏதாவது ஒரு வகையில் பன்னீரை கொடுங்கள் என்று டாக்டர் கூறினார்.

என்னென்ன காய்கறிகள் கொடுக்கலாம்?

தேர்வு காலத்தில் வெண்டைக்காயை பொரியலாக செய்து கொடுக்கலாம். இது ஞாபக சக்தியை அதிகரிக்கும், மூளையை சுறுசுறுப்பாக செயல்படத் தூண்டும் மற்றும் மூளைக்கே இரத்த ஓட்டத்தை சீராக்க வைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. மற்றபடி அனைத்து காய்கறிகளையும் தினசரி உணவில் சேர்க்கலாம். குறிப்பாக கேரட், பீட்ரூட், ப்ராக்கோலி, சோயா பொருட்கள் போன்றவற்றை சேர்க்கலாம் என்று டாக்டர் கூறினார்.

என்னென்ன பழங்களை கொடுக்கலாம்?

திராட்சை, ஆரஞ்சு, அவகேடோ, பப்பாளி, சிவப்பு கொய்யாப்பழம், ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி போன்ற பழங்களை தேர்வு காலங்களில் குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிட கொடுக்கலாம். அதுவும் இந்த பழங்களை ஜூஸ் வடிவில் கொடுக்காமல், முழுமையாக கடித்து சாப்பிட கொடுங்கள். அப்படி கொடுத்தால் தான், அதில் உள்ள முழு சத்துக்கள் கிடைக்கும் என்று டாக்டர் கூறினார்.

சிறந்த ஸ்நாக்ஸ் எது?

வேர்க்கடலை

தேர்வு காலத்தில் குழந்தைகள் படிக்கும் போது ஸ்நாக்ஸ் சாப்பிட நிச்சயம் கேட்பார்கள். அப்போது வேக வைத்த வேர்க்கடலையை சாப்பிடக் கொடுக்கலாம். ஏனெனில் வேர்க்கடலையில் ஏகப்பட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முக்கியமான வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் முக்கியமான ஸ்நாக்ஸ் தான் இது. இந்த வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிட கொடுக்கலாம். இல்லாவிட்டால் வேர்க்கடலை வெண்ணெயை தோசையில் தடவி சாப்பிட கொடுக்கலாம். ஆனால் வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிட கொடுத்தால் தான் மிகவும் நல்லது.

ஆளி விதை, பூசணி விதைகள், பாதாம்

ஆளி விதை, பூசணி விதைகள் போன்றவற்றை சாலட்டுகளின் மேல் தூவி சாப்பிட கொடுக்கலாம் அல்லது தனியாக சாப்பிடவும் கொடுக்கலாம். இது தவிர தினமும் 4-5 பாதாம் பருப்புகளை நீரில் ஊற வைத்து தோலுரித்து சாப்பிட கொடுக்கலாம். ஆனால் பாதாமை தோலுடன் சாப்பிட கொடுக்காதீர்கள் என்று டாக்டர் கூறினார்.

எனவே பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் தேர்வு அறையில் எதையும் மறக்காமல் சிறப்பான ஞாபக சக்தியுடன் இருக்க நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தேர்வு காலங்களில் தொடர்ந்து சாப்பிட கொடுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion