இயற்கையான கண் மை நாமே தயாரிக்கலாம் வாங்க!!

கண்ணுக்கு மை அழகு. அதோடு ஆரோக்கியமும் கூட. கண்களில் உண்டாகும் சூட்டை கட்டுப்படுத்தும். குளிர்ச்சியானது. கண்களுக்குள் விழும் தூசுகளை எளிதாக வெளியேற்றும்.

ஆனால் மைகளை நாம் கடைகளில் வாங்குகிறோம். அவை 100 சதவீதம் இயற்கையானது அல்ல. சிலவற்றில் மெழுகு போன்றவற்றை கலப்பார்கள். இப்போது மை அழியக் கூடாது என்று, நீரினால் அழியாத வண்ணம் கெமிக்கல் கலந்து விற்கிறார்கள். இவை கண்களுக்கு நல்லதல்ல. கண்மை அழியத்தான் செய்யும். அதுதான் இயற்கையானது.

DIY Homemade organic kajal for your eyes

இயற்கையான கண்மை உங்களுக்கு செய்ய தெரியாதென்றால் , இங்கே இருக்கும் குறிப்பின்படி செய்யுங்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக வரும். மிக மிக நல்லது. கண்களுக்கு ஒளியை தரும். இமைகள் அடர்த்தியாகும். புருவங்களும் உபயோகிக்கலாம். இதனால் புருவம் இல்லாதவரகளுக்கு நன்றாக வளரும்.

தேவையானவை :

விளக்கெண்ணெய் - ஒரு கப் அளவு.
சந்தனம் - தேவையான அளவு
விளக்கு - மண் விளக்கு இருந்தால் உகந்தது.
செம்பு தட்டு அல்லது பித்தளைதட்டு - 1

சந்தன வில்லையை விட சந்தன கட்டை நல்லது. சந்தனக் கட்டையால் சந்தனத்தை தேய்த்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சுத்தமான சிறிய பருத்தித் துணியில் சந்தனத்தை தோய்த்து காய விடுங்கள். நன்றாக காய்ந்ததும் அதனை திரி போல் செய்து கொள்ளுங்கள். ஓரளவு பெரிய விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு அதில் திரியை வைக்கவும்.

செம்பு தட்டு இருந்தால் மிகவும் நல்லது. அது இல்லையென்றால் ஏதாவது பித்தளை தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தட்டின் உள்ளே சந்தனத்தை முழுவதும் தடவுங்கள்.

இப்போது திரியில் தீபம் ஏற்றி அதன் மேல் இந்த சந்தனம் பூசிய தட்டை மூடுங்கள். சந்தனம் தீயின் மீது படும்படி வைக்க வேண்டும். லேசாக காற்று பூகும்படி வைக்க வேண்டும். இல்லையெனில் அணைந்துவிடும்.

இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறு நாள் தட்டை எடுத்துப் பார்த்தால், அதில் சந்தனக் கரி தட்டில் படிந்து இருக்கும். அந்த கரியை அனைத்தையும் ஒரு ஸ்பூனால் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கரியில் சுத்தமான நெய் அல்லது விளக்கெண்ணெய் சிறிது குழைத்தால் மை தயார். குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு வரும் செய்து பாருங்கள். பலனளித்தால் உங்கள் எண்ணங்களை இங்கே பகிருங்கள்.

Desktop Bottom Promotion