தலைமுடி அடர்த்தியா வேகமா வளரணுமா? அப்ப கற்றாழை எண்ணெயை இப்படி தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..

Hair Care Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் பல்வேறு பொருட்களை பயன்படுத்துவோம். அதில் சிலர் தலைமுடி ஆரோக்கியமாகவும், பொலிவாகவும், நீளமாகவும் இருக்க வேண்டுமென்று கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி கடைகளில் விற்கப்படும் கண்ட எண்ணெய்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுப்பதை விட, வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தி வந்தாலே தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Hair Care Tips How To Make Aloe Vera Oil At Home For Faster Hair Growth

அப்படி பழங்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு பொருள் தான் கற்றாழை. இந்த கற்றாழையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், நொதிகள் போன்றவை அதிகம் இருப்பதால், அவை ஸ்கால்ப்பிற்கு ஆழமாக ஊட்டமளித்து, மயிர்கால்களை வலுவடையச் செய்து, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதுவும் கற்றாழை ஜெல்லுடன் ஏதாவது ஒரு எண்ணெயை கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வரும் போது, தலைமுடி வளர்வதோடு, முடி உதிர்வது தடுக்கப்பட்டு, பொடுகு தொல்லை மற்றும் தலைமுடி மெலிவது போன்றவையும் தடுக்கப்படும்.

கற்றாழை எண்ணெய் எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது?

கற்றாழை எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள், அமினோ ஆசிட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல பொருட்கள் உள்ளன. இவை மயிர்க்கால்களைப் பாதுகாத்து, அவற்றைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் கற்றாழை முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எவ்வித அறிவியல் சான்றும் இல்லை. ஆயினும் அதில் உள்ள அலோயின் என்னும் வேதிப்பொருள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக பலர் நம்புகின்றனர்.

Hair Care Tips How To Make Aloe Vera Oil At Home For Faster Hair Growth

கற்றாழை எண்ணெயை தயாரிப்பது எப்படி?

* கற்றாழை எண்ணெய் தயாரிப்பதற்கு முதலில் கற்றாழை இலையை எடுத்து, நீரில் நன்கு கழுவி, உலர்த்திக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் கூர்மையான முனைப்பகுதிகளை நீக்கிவிட்டு, அதன் கண்ணாடி போன்ற தசைப் பகுதியை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனில் 2 கப் தேங்காய் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் துண்டுகளாக்கப்பட்ட கற்றாழையை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* எண்ணெயானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது நன்கு கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அந்த எண்ணெயில் உள்ள கற்றாழை துண்டுகளை நீக்கிவிட்டு, ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
* இப்போது கற்றாழை எண்ணெய் தயார்.

கற்றாழை எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவது எப்படி?

* கற்றாழை எண்ணெயை ஸ்கால்ப் முதல் முடியின் நுனிப்பகுதி வரை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, நன்கு 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

* இன்னும் சிறப்பான பலனைப் பெற கற்றாழை எண்ணெயுடன் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

* முக்கியமாக கற்றாழை எண்ணெயை ஒருமுறை தயாரித்தால், 2 வாரங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். அதற்கு மேல் வைத்து பயன்படுத்தக்கூடாது. மேலும் இந்த எண்ணெயை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, May 28, 2026, 19:02 [IST]
Desktop Bottom Promotion