அம்மை வடுக்களை போக்கும் அடுப்பங்கரைப் பொருட்கள் !

By Mayura Akilan

Home Remedies Scars
கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும் என்று கூறியுள்ளனர்.

கசகசா, மஞ்சள் துண்டு

2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.

எலுமிச்சை வைத்தியம்

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.

கருமை நீங்க

அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீங்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சசம் பழம் சாறு எடும்து ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதை செய்து வர முகம் பளிச் ஆகும்.

முகப்பரு அகல

அம்மை வடுக்களைப் போல முகப்பருவம் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

இதேபோல் நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.

Story first published: Saturday, March 24, 2012, 17:29 [IST]
Desktop Bottom Promotion