Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
22வருடங்களாக பெண்ணை தனியறையில் அடைத்து சித்திரவதை ! My Story #168
இருபத்திரெண்டு வருடங்களாக தனியறையில் அடைத்து கொடுமை செய்யப்பட்ட பெண்.
கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. தன் மேல் அடி விழுவதைப் போல கதவில் விழுகிற ஒவ்வொரு அடிக்கும் பயந்து நடுங்கி பின்னால் சென்று கொண்டிருந்தாள். ஒரு துளி வெளிச்சம் அந்த அறையில் இருந்திருக்கவில்லை. அருகில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாது தட்டுத் தடுமாறி தனக்கு பிடிமானம் ஏதும் கிடைத்திடுமா என்று கால்களால் துளாவினால்.
பாவம் சூம்பிப் போய்கிடக்கும் அவற்றால் இவளுக்கு உதவி செய்யத்தான் முடியவில்லை. இம்முறை உள்ளே யார் வந்தாலும் அடித்து விட்டு தப்பித்திட வேண்டும் என்று முனைப்புடன் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கட்டப்பட்டிருந்த கைகளை அவிழ்க்க போராடியபடி கால்களால் அங்கேயிங்கே என துலாவினாள். கட்டப்பட்டிருக்கும் பிடியிலிருந்து அவிழ்த்து கொண்டு போய் விட்டுவிட வேண்டும் என்று மனம் தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தது.
சத்தம் அதிகமானது. இவளுக்கும் படபடப்பு இரட்டிப்பானது. கதவை அடிக்கிற வேகத்தைப் பார்த்தால் இம்முறை அந்த அரக்கனோடு இன்னும் பலர் வந்திருப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டாள். தன்னால் இங்கிருந்து ஒரு அடி கூட நகரமுடியவில்லை என்று கத்தி அரற்றினாள்.
சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது. விவரம் தெரிந்து இதுவரை இவ்வளவு விசாலமாக இரண்டு கதவுகளையும் திறந்ததேயில்லை. கண்ணே கூசுகிறது. பின்னால் திரும்பிப் பார்த்தால் சட்டைப் பேண்ட் போட்டுக் கொண்டு பலரும் மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு நிற்கிறார்கள். தங்களுக்குள் ஏதோ குசுகுசுவென்று பேசுகிறார்கள்.

ஃப்ளாஸ்பேக் :
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் அப்பா அம்மா நான் அக்கா என அந்த ஊருக்கு புதிதாக வந்திருந்தோம். இந்த ஊரில் பிழைப்புத் தேடி வந்திருந்தோம். ஆறு மாதத்தில் வீட்டில் பயங்கர சண்டை.
அக்காவுக்கும் எனக்கும் அடி விழுந்தது. காரணம் ஏதும் தெரியது. அன்றைக்கு இரவு அக்கா மாயமானாள்.

அப்பா அம்மா :
யாரோ ஒருவர் வந்து எங்கள் வீட்டில் அத்துமீறி நுழைந்து தேடினார்கள் அப்பாவையும் அம்மாவையும் வசை மாறி பொழிந்து விட்டு இருந்த ஒன்றிரண்டு பொருட்களையும் அடித்து உடைத்துவிட்டுச் சென்றனர்.
தவழ்ந்து தவழ்ந்து முன்னறைக்கு வந்தேன். இருவரும் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.

நொண்டி பிள்ள :
அன்றைக்கு முழுவதும் நாங்கள் யாருமே சாப்பிடவில்லை. மதியத்திற்கு பிறகு அப்பா சட்டை மாட்டிக் கொண்டு எங்கோ சென்றார். அம்மா இருந்த இடத்திலிருந்து நகரவில்லை. மெல்ல நகர்ந்து நான் அம்மா மடியில் போய் உட்கார்ந்து கொண்டேன்.
அழாதம்மா.... ஏன் அழற என்று கண்ணீரை துடைத்துவிட்டேன்.
அம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அம்மாவை அணைத்துக் கொண்டு அங்கேயே தூங்க ஆரம்பித்தேன். அம்மாவும் கண்ணசந்திருக்க வேண்டும். திடீரென்று வண்டிகள் சத்தம் கேட்டது வாசலில் அம்மா மடியில் படுத்திருந்த என்னை யாரோ பிடித்து இழுக்கிறார்கள். கண்ணைத்திறந்து அம்மா என்று கத்துவதற்குள் அவர்கள் என்னை இழுத்து தூக்கிக் கொண்டார்கள்.

பையன கூட்டிட்டு வா :
அம்மா கத்தி கூச்சலிட்டாள்.... என்னை பிடிக்க பின்னாடியே ஓடிவந்தாள்... சின்ன பிள்ளங்க நடக்க முடியாத பிள்ளங்க விட்ருங்க என்று கெஞ்சினாள்.
நொண்டி பிள்ள தானா.... எங்கள்ட்டயே இருக்கட்டும் உன் பெரிய பொண்ணையும் எங்க பையனுயும் கூட்டிட்டு வா அப்பறம் இந்த புள்ளைய வாங்கிக்கலாம் என்று சொல்லிவிட்டு காரில் என்னை கிடாசிவிட்டு பறந்தார்கள். ஒரு பொதி மூட்டையைப் போல உள்ளே இருந்தவன் என்னை பிடித்துக் கொண்டான்.

ஒரு வாரம் கழித்து :
காரில் கையையும் வாயையும் கட்டி ஒருவன் தூக்கி வந்தான். அம்மா அப்பா நிற்கிறார்கள்... அதோ என் அக்கா பாவி உன்னால் தானே என்னைய தூக்கிட்டு போனானங்க பார்க்கும் போதே ஓடிச் சென்று இரண்டு அறை அறைந்து விட்டு வர வேண்டும் போலிருந்தது.
அது யாரு அக்கா பக்கத்துல? அம்மா என்னைப் பார்த்து பார்த்து அழுதாள். நானும் அம்மாவிடம் போக வேண்டும் என்று அழுதேன்.... வாயத் தொறந்து கிணத்துக்குள்ள போட்ருவேன் வாய மூடு என்று எனக்கு பின்னால் நின்றிருந்த முரடன் கத்தினான்.
விசும்பிக் கொண்டே வாயை மூடிக் கொண்டேன்.

காதலிக்கிறோம் :
நீ சொல்லுமா?
எனக்கு வீட்டுக்கு போக இஷ்டமில்ல நாங்க ரெண்டு பேரும் மேஜர் ரிஜஸ்டர் மேரேஜ் பண்ணியிருக்கோம் நான் என் புருஷனோட தான் வாழ்வேன்.
அடிப்பாவி என்று அம்மா முதுகில் அடிக்க சுற்றியிருப்பவர்கள் அம்மாவை பிடித்துக் கொண்டார்கள்.
இந்த பையன் நமக்கு வேணாம்மா.... வேறு ஒரு நல்ல இடமா பாத்து அப்பா உனக்கு கட்டி வைக்கிறேன் இங்க வந்துருடா.... இது அப்பா
அந்த பையனோடயே போணும்னா என் பொணத்த தாண்டித்தான் போகணும். இங்கயே நான் தீக்குளிச்சு செத்துருவேன் இங்க பாரு என்று கையோ எடுத்து வந்திருந்த கேனை எடுத்து காண்பித்தாள் அம்மா.

பையனிடம் கேள்வி :
பையனிடம் கேட்டார்கள்.... முதலில் வீட்டிற்குச் செல்ல விருப்பமில்லை என்றான்.
தனியா போய்டுவியா நீ? எங்க போய் எப்டி வாழ்றன்னு பாக்குறேன்....
இங்கயிருந்து நகந்த அடுத்த நிமிஷம் உன் தலத் தனியா உடம்பு தனியாக விழுதா இல்லையான்னு பாரு....என்று குரல் வந்தது. அம்மா என்னைக் காண்பித்தாள். பாரு டீ தங்கச்சிய பிடிச்சு வச்சிருக்காங்க சொன்னாக்கேளு இந்த பையன் நமக்கு வேணாம் ஒத்து வராது என்று கெஞ்சினாள்.
அதான் உங்கம்மா இவ்ளோ சொல்லுதுல்ல.... எவ்ளோ கல்நெஞ்சுக்காரியா இருக்கா பாரேன் போமாட்டேன்னு வாயத் தொறக்குறாளா... என்று பேசிக் கொண்டார்கள்.

ஒரு நிமிடம் :
அக்கா என்னையையும், அம்மாவையும் மாறி மாறி பார்த்தாள் நாலபுறமும் கத்தினார்கள்... ஒரு நிமிடம் எல்லாம் ஒரு நிமிடம் தான் மொத்தமும் முடிந்து போனது ஆம்...
இவ்ளோ சொல்றேன் ... அப்படியே நிக்கிறள்ள உனக்கு சொன்னா புரியாது என்று சொல்லி அம்மா கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டாள். நொடிப்பொழுதில் குப்பென்று.... பிடித்துக் கொண்டது. அலறிக் கொண்டு அங்குமிங்கும் ஓடினாள். எல்லாரும் பின்னால் நகர அக்கா மட்டும் அம்மா அம்மா என்று அருகில் ஒடினாள்..பலரும் அக்காவை தடுக்க முயற்சித்தும் அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் செல்ல அம்மா நெருப்பு புகைய அக்காவை பிடித்துக் கொண்டாள். அவ்வளவு தான் அக்காவால் மீள முடியவில்லை. பத்து நிமிடத்தில் இரண்டு பேரும் கரிக்கட்டையாக வீழ்ந்தார்கள்.

பைத்தியம் :
விபரீதமாகிவிட்டது என்பதை உணர்ந்தவர்கள் என்னை அங்கேயே இறக்கிவிட்டு வந்த வண்டியில் அந்த பையனை மட்டும் இழுத்து போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைந்தது. நான் தவழ்ந்து தவழ்ந்து அவர்கள் இருவருக்கும் அருகில் சென்றேன். அம்மா உடலிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. அணிந்திருந்த ஊதா நிற ஜாக்கெட் உடலோடு ஒட்டி சதையெல்லாம் பிய்த்து தொங்கிக் கொண்டிருந்தது.
அக்காவை பார்க்கத்தான் பயங்கரமாய் இருந்தது. கண்ணை மூடவேயில்லை ஒரு பக்க கண் முழுவதும் வெந்து வழிந்திருந்தது.

பாப்பா.... :
இருவரையும் மாறி மாறி பார்த்தேன். அம்மாவிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை. அம்மா வாம்மா இந்த அக்கா நமக்கு வேணாம். நம்ம வீட்டுக்கு போய்டலாம் வாம்ம்மா.... உனக்கு வென்னீ வச்சுத்தரேன்.... நீ சொல்லுவல்ல எவ்ளோ அழுக்கா இருந்தாலும் சீயக்கா தேச்சு குளிச்சா போய்டும்னு நான் உனக்கு சீயக்கா தேச்சுவிடுறேன் இதெல்லாம் போய்டும் எந்திரிப்பாம்மா.... என்று அவளை உசுப்ப நான் பிடித்த இடத்தில் தசை பிய்ந்து விழுந்தது.
அலறி விலகினேன்.
பாப்பா அக்காக்கு தண்ணீர் குடுறா தண்ணீ தாகமெடுக்குது சின்ன டம்பளர்ல மோண்டுட்டுவாம்மா என்றாள்.

விக்கல் :
அக்காவால் தான் அம்மாவுக்கு இந்த நிலைமை என்று என் கோபத்தை காட்டுவதா அல்லது அவளும் அம்மாவைப் போலவே உடலெல்லாம் கருகிப் போய் கிடக்கிறாள் என்று பரிதாபப்படுவதா என்று எதுவும் தெரியவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பாப்பா.... தண்ணீ.... தண்ணீ ..... அப்பா.... அம்மா என்று ஒவ்வொரு வார்த்தையாக சொல்ல ஆரம்பித்தால் விக்கல் எடுக்க ஆரம்பித்தது
இன்னமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் விக்கல் எடுத்து உடல் ஒரு முறை மேலேயேறி கீழே இறங்கியது. மூன்றாம் விக்கலுக்கு மேலே எழும்பிய உடல் கீழே இறங்கவேயில்லை..... மூச்சும் நின்றது. அவளையே உற்றுப் பார்த்தேன். என்ன நினைத்தேனோ தெரியவில்லை சிரித்தேன்.
சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த அப்பா எழுந்தார்.என்னை ஒரு கையால் தூக்கியபடி அக்காவின் முகத்தில் மண்ணைத் தூவி நாசமாப்போ.... என்று சபித்துவிட்டு நகர்ந்தார்.

அம்மா வாடை :
அப்பா அம்மா வர்றாப்பா..... அம்மாக்கு சீயக்கா அரைக்கணும்.... உடம்பெல்லாம் அழுக்கு என்று அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்தேன் . ரோட்டில் போவோர் வருவோரிடமெல்லாம்.... சீயக்கா அரைக்கணும் கொஞ்சம் காசு தரீங்களா.... உங்களுக்கு அம்மா வாடை வர்லயா? அம்மாவ குளிப்பாட்டணும் என்று சொல்லி அவர்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்தேன்.
அம்மா இருக்கும் போது வாசல் படி தாண்டினாலே வெளக்கமாறு பிஞ்சுரும் என்று மிரட்டிக் கொண்டு என்னைத் தூக்க ஓடிவருவாள். இப்போது தான் அப்படி மிரட்ட யாருமில்லையே தெரு முக்கு வரையிலும் தவழ்ந்து கொண்டே போவேன். செல்லும் வழியில் ஒரு சிலர் என்னைத் தூக்கி அவர்கள் வீட்டு வாசலில் உட்கார வைத்து எதாவது சாப்பிடக் கொடுப்பார்கள்.

எந்தப் பொண்ணு :
எங்கள் கதை ஊரில் பயங்கர வேகமாய் பரவியது. அப்பா வேலை கேட்டு செல்லும் இடத்தில் எல்லாம் எது ஊர் பஞ்சாயத்துல அம்மாவும் மகளும் தீக்குளிச்சு செத்தாங்களே அவங்களா?
இரண்டாவது பொண்ணையும் ஒரு வாரம் தூக்கிட்டு போய்ட்டாங்களாம்? பொண்ணு எப்டி.... பொண்ணுக்குவேனா வேல போட்டுத் தரேன் என்று நக்கலுடன் கிண்டலடித்து சிரிக்க அப்பாவுக்கு கோபம் வந்திட்டிருக்கிறது அங்கே கிடந்த பேப்பர் வெயிட்டை ஓங்கி அவர் மண்டையில் அடிக்க ரத்தம் பீறிட்டு அங்கேயே மயங்கி விழுந்து விட்டார்.

புது வீடு :
வேக வேகமாக வீட்டிற்கு வந்தவர். கையில் கிடைத்த பொருட்களை திணித்துக் கொண்டார். எனக்கான உடையையும் இன்னொரு பையில் திணித்து அம்மா உண்டியலில் சேர்த்து வைத்திருந்த காசை உடைத்து எடுத்துக் கொண்டு வீட்டைக் கூட பூட்டாமல் வெளியேறினார்.
எங்கப்பா போறோம்....
ஸ்ஸூ.... பேசாத என்று என்னை அமைதிப்படுத்திவிட்டு எங்கோ அழைத்துச் சென்றார்....
பஸ் ஸ்டாண்டு :
ஒரு பக்கம் இரண்டு பைகள் இன்னொரு பக்கம் நான் என சுமந்து கொண்டு அப்பா நடையாய் நடந்தார். பஸ் ஸ்டாண்டு திண்ணையில் சாப்பிட வாங்கிக் கொடுத்து அங்கேயே படுக்க வைத்து காணாமற் போய்விடுவார்.
விடிவதற்கு சற்று முன்பாக வந்து என்னருகில் படுத்துக் கொள்வார்.
பல மாதங்கள் வரை தெருவோரம், ரயில்வே ப்ளாட்பார்ம், தான் எங்கள் வீடாக இருந்தது.

ஆட்டம் ஆரம்பம் :
நடு இரவில் என்னை தூக்கிக் கொண்டு ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அங்கிருந்த தூணில் என்னை சங்கிலியால் கட்டிப் போட்டு வாயையும் கட்டினார்.
நான் மட்டும்தாங்க.... கல்யாணமே பண்ணலங்க சின்னதுலயே அம்மா அப்ப இறந்துட்டாங்க வேல செஞ்சு பொழைக்க இங்க வந்திருக்கேன் என்று அப்பா யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் எல்லாம் சென்றதும் கதவை கவனமாக தாழ்பாள் போட்டுவிட்டு உள்ளே வந்தார்.
அப்பா அம்மாட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்திருக்க.... அம்மா எப்போ வருவா?
நீ அமைதியா இருந்தா வருவா..... இந்தா திண்ணு என்று பொட்டலத்தை விரித்தார்.
ஏன் கட்டி வச்சிருக்க அவுத்துவிடு...
பொட்டலத்தை என் அருகில் தள்ளிவிட்டு எழுந்து போய் விட்டார்.

22 வருடம் :
நாட்கள் நகர்ந்தது. இருபத்திரண்டு வருடங்கள் அந்த சிறிய அறையே என் உலகமாக சுருங்கிப் போனது. ஜன்னல் கதவுகள் எல்லாம் இழுத்து தாளிடப்பட்டிருந்தது. சளி, காய்ச்சல், மாதவிடாய் என எதற்குமே வெளியில் சென்றதில்லை.வாரமொருமுறை அப்பா வந்து தலைக்கு தண்ணீர் ஊற்றுவார். வாரம் ஒரு முறை பிரியாணி வரும். பிரியாணி வருகிற நாட்கள் எல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்று கணக்கு வைத்துக் கொள்வேன்.
அந்த இருட்டறையும் அம்மாவின் வாசமும் மட்டுமே என் வாழ்நாள் சொத்தாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தேன். அமைதியா இருந்தா அம்மா வருவாளாம்..... இன்னும் கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து பாக்கலாமா?



Click it and Unblock the Notifications











