வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..

Posted By:

Vellai Kuzhi Paniyaram With Kara Chutney Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை குழி பணியாரம் செய்யுங்கள். அதுவும் உளுந்து எதுவும் சேர்க்காத வெள்ளை குழி பணியாரத்தை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியை செய்து சாப்பிடுங்கள்.

Vellai Kuzhi Paniyaram With Kara Chutney How To Make It At Home

இந்த டிபனை காலையில் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், போட்டி போட்டு சாப்பிடுவார்கள். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பணியாரத்தை வாரம் ஒருமுறை உங்கள் காலை உணவு மெனுவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வெள்ளை குழி பணியாரம் மற்றும் கார சட்னி ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை குழி பணியாரம் மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மாவு பச்சரிசி - 2 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* வடித்த சாதம் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னிக்கு...

* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 8 பல்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் மாவு பச்சரிசி மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, நீரில் 2 முறை கழுவி, சுத்தமான நீரை ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு சேர்த்து, அத்துடன் 1 கப் துருவிய தேங்காய், 1 கப் சாதம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு, மூடி வைத்து 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். காலையில் பணியாரம் செய்யப் போதென்றால், இரவு தூங்கும் முன்பு இந்த மாவை அரைத்து வைத்தால், சரியாக இருக்கும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை எடுத்து, அத்துடன் நல்ல சூடான நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த மிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து, சிறிது மிளகாய் ஊற வைத்த நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சாப்பரில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு பொடியாக சாப் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை சாப்பர் இல்லாவிட்டால் மிக்சர் ஜாரில் சேர்த்து, லேசாக ஒருமுறை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காய பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கார சட்னி தயார்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில் சிறிது எண்ணெய் ஊற்றி, புளிக்க வைத்த மாவை நன்கு கலந்து, குழிகளில் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வெள்ளை குழி பணியாரம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, May 8, 2026, 6:44 [IST]
Desktop Bottom Promotion