ஹோலிப் பண்டிகைக்கு 'ஸ்வீட் சமோசா'!

By Mayura Akilan

Sweet Somasa
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை தமிழ்நாட்டிலும் வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலத்தவர் அழைப்பின் பேரில் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது அங்கே வகை வகையான இனிப்பு வகைகளை சமைத்திருந்தனர். அதில் இருந்த இனிப்பு சமோசா சாப்பிட சுவையாக இருந்தது. உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்

தேவையானப் பொருட்கள்

மைதாமாவு - கால் கிலோ
தேங்காய் – 1
வெல்லம் – கால் கிலோ
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 2 டீ ஸ்பூன்

செய்முறை

மைதா மாவினை தண்ணீர் விட்டு பூரிக்கு பிசைவது போன்ற பக்குவத்தில் கெட்டியாகப் பிசைந்து ஊறவைத்துக் கொள்ளவும்.

தேங்காய் பூரணம்

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாகக் கிளறவும், தண்ணீர் வற்றி, பூரணம் சுருண்டு வந்ததும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி செய்து போட்டு கலக்கவும். தேங்காய் பூரணம் நன்றாக ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.

மைதாவை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை இரண்டு கை விரல்களாலும் அழுத்தி சிறிய வட்டமாக்கவும். நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்றாக மூடி கொழுக்கட்டை வடிவம் போல் செய்யவும். இதே போல எல்லா உருண்டைகளையும் பூரணம் வைத்து இனிப்பு சமோசா போலச் செய்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை நான்கு நான்காக போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதே போல எல்லாக் இனிப்பு சமோசாக்களையும் செய்யவும். குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவர். வெல்லம், தேங்காய் பூரணம் என்பதால் பெரியவர்களும் சாப்பிடலாம்.

தேங்காய் பூரணத்துக்குப் பதிலாக கடலைப் பூரணம் வைத்தும் இனிப்பு சமோசா செய்யலாம்.

Story first published: Wednesday, March 7, 2012, 15:20 [IST]
Desktop Bottom Promotion