கீரை கூட்டு

By Maha

உணவுப் பொருட்களிலேயே கீரையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அத்தகைய கீரையை பொரியல், கூட்டு என்று எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். உங்களுக்கு மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுமாறு கீரையை சமைத்து சாப்பிட நினைத்தால், கூட்டு செய்து சாப்பிடுங்கள்.

அதுவும் தேங்காயை அரைத்து சேர்த்து கூட்டு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். இங்கு தேங்காய் சேர்த்து செய்யப்படும் கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Keerai Kootu Recipe

தேவையான பொருட்கள்:

கீரை - 1 கப் (உங்களுக்கு பிடித்தது)
பாசிப் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4-5 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 1/4 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1/2 டேபிள்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் அரிசி மாவு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் பாசிப்பருப்பை போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கீரையை நீரில் ஒருமுறை அலசி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கீரையை வேக வைக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் குக்கரில் உள்ள கீரையை பருப்புடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கீரை கூட்டு ரெடி!!!

Image Courtesy: sharmispassions

Desktop Bottom Promotion