கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்...

Posted By:

Tomato Rasam Recipe In Tamil: நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது, உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்துக் கொள்ளும்படியான உணவுகளை சமைத்து சாப்பிடுவது நல்லது. அதுவும் வெயில் காலத்தில் சமையலறையில் நீண்ட நேரம் நின்று சமைக்கவே பிடிக்காது; சட்டென்று சமையலை முடிக்கவே நினைப்போம்.

அப்படி கோடையில் சாப்பிட ஏற்ற ஒரு ருசியான ரெசிபி தான் தக்காளி ரசம். அதுவும் தக்காளி ரசத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்து சாப்பிடும் போது, சாம்பார், குழம்பு என்று எதுவுமே தேவைப்படாது. இந்த ரசமும், ஏதாவது ஒரு துவையலும் இருந்தாலே போதும்.

Tomato Rasam How To Make Simple And Tasty Thakkali Rasam

உங்களுக்கு தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

ரச பொடிக்கு...

* மிளகு - 3/4 ஸ்பூன்
* சீரகம் - 1 ஸ்பூன்
* வெந்தயம் - 2 சிட்டிகை
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 1
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

கரைப்பதற்கு...

* நன்கு கனிந்த தக்காளி - 5 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* தண்ணீர் - 1 1/2 லிட்டர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு..

* நல்லெண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பூண்டு - 6 பல் (தட்டியது)
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து வடிகட்டி, புளிச்சாற்றினை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ரசப்பொடி அரைப்பதற்கு மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, காஷ்மீரி வரமிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, கொரகொரவென்று அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் நன்கு கனிந்த தக்காளி பழத்தை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில், புளிச்சாறு, சுவைக்கேற்ப உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 லிட்டர் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, விதைகளை நீக்கிய வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள ரசத்தை ஊற்றி, வெல்லத்தை சேர்த்து, சுவை பார்த்து, லேசாக நுரைக்கட்ட ஆரம்பித்து, பச்சை வாசனை போனதும், அதை இறக்கி கொத்தமல்லியைத் தூவி, 1/4 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்தால், சுவையான தக்காளி ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 24, 2026, 14:57 [IST]
Desktop Bottom Promotion