பேச்சுலர்களுக்கான... தக்காளி குருமா

இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போறீங்களா? அதற்கு சற்று புளிப்பான மற்றும் ருசியான ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? வீட்டில் தக்காளி இருந்தால், சுவையான தக்காளி குருமா செய்து சாப்பிடுங்கள்.

Posted By:

இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போறீங்களா? அதற்கு சற்று புளிப்பான மற்றும் ருசியான ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? வீட்டில் தக்காளி இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான தக்காளி குருமா செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி குருமா இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த குருமா குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும்.

Tomato Kurma Recipe In Tamil

உங்களுக்கு தக்காளி குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/4 கப்

* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி - 5

* சோம்பு - 1/2 டீஸ்பூன்

* மல்லி - 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2

* தண்ணீர் - தேவையான அளவு

பிற பொருட்கள்...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* பட்டை - 1/2 இன்ச்

* கறிவேப்பிலை - சிறிது

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 3 (பெரியது மற்றும் நறுக்கியது)

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் - தேவையான அளவு

* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தக்காளி குருமா தயார்.

Image Courtesy: hebbarskitchen

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 20, 2022, 19:53 [IST]
Desktop Bottom Promotion