2 கப் அவல் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Tomato Aval Upma Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் நீங்கள் இதுவரை உங்கள் வீட்டில் செய்திராத ஒரு புதுவிதமான டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் மற்றும் தக்காளி உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு உப்புமா செய்யுங்கள்.

இந்த தக்காளி அவல் உப்புமா காலையில் வேகமாக செய்ய ஏற்ற ஒரு சூப்பரான டிபன். வேலைக்கு செல்பவர்கள் விரைவில் ஒரு காலை டிபனை செய்ய நினைத்தால், இதை செய்யலாம். அந்த அளவில் இது ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Tomato Aval Upma How To Make a Tomato Aval Upma Recipe

உங்களுக்கு தக்காளி அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கெட்டி அவல் - 2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 3 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 1/4 கப்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (துருவியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கெட்டி அவலை எடுத்து, நீரில் 2 முறை கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை ஊற்றி 3 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனைப் போக வதக்கி வேக வைக்க வேண்டும்.
* மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் கழுவி வைத்துள்ள அவலை சேர்த்து கிளறி, நீர் வற்றியதும், அதில் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி கிளறி விட வேண்டும்.
* இறுதியாக 1 டீஸ்பூன் நெய்யை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தக்காளி அவல் உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 7, 2025, 6:45 [IST]
Desktop Bottom Promotion