மரவள்ளிக்கிழங்கை வெறுமனே வேக வெச்சு சாப்பிடாம.. ஒருவாட்டி இப்படி அடை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Maravalli Kizhangu Adai Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலை வேளையில் என்ன டிபன் செய்வதென்று முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக இருக்கும். அதுவும் வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லாவிட்டால், அந்நாளில் காலை டிபனை முடிவெடுப்பது சிரமமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி சற்று வித்தியாசமான சமையலை எதிர்பார்ப்பார்களா?

அப்படியானால் ஒருமுறை மரவள்ளிக்கிழங்கை வாங்கி வந்து, அதைக் கொண்டு அடை செய்து கொடுங்கள். பெரும்பாலும் மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அதைக் கொண்டு அடை செய்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மரவள்ளிக்கிழங்கு பருப்பு அடை வழக்கமாக சாப்பிடும் அடையை விட ருசியாக இருக்கும். மேலும் இந்த அடை சத்தானதும் கூட. இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Tapioca Adai How To Make a Maravalli Kizhangu Adai Recipe

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு பருப்பு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு பருப்பு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புழுங்கல் அரிசி - 1 கப்
* கடலைப்பருப்பு - 1/4 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* மரவள்ளிக்கிழங்கு - மீடியம் சைஸ்
* வரமிளகாய் - 10
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4-5 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை எடுத்து, நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மரவள்ளிக்கிழங்கை எடுத்து, அதன் தோலை சீவிவிட்டு, பின் அதை சிறு துண்டுகளாக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, அரைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து, அத்துடன் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய், சீரகம், பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து விட வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி, அடை போன்று ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion