உடல் சூட்டைக் குறைக்கும் கம்பு கூழ் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க!

Posted By:

Summer Special Kambu Koozh Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுவார்கள். இப்படி உடல் சூட்டால் அவதிப்படும் போது, அதைத் தணிக்க நீரை அதிகம் குடிப்பதோடு, நீர்ச்சத்துள்ள பழங்களுடன், நீர்மோர், இளநீர் போன்றவற்றை அருந்துவார்கள்.

அதுமட்டுமின்றி, உடல் சூட்டை குறைக்க உதவும் சிறந்த தானியம் தான் கம்பு. இந்த கம்பு கொண்டு கூழ் தயாரித்து கோடைக்காலத்தில் குடித்து வரும் போது, உடல் சூடு குறைவதோடு, உடலும் வலிமையாகவும், ஆற்றலுடனும் இருக்கும்.

Summer Special Kambu Koozh Recipe How To Make Pearl Millet Porridge

கம்பு கூழ் செய்வது மிகவும் சுலபம். அதுவும் இதை முந்தைய நாள் இரவு செய்து வைத்தால், மறுநாளை காலையில் குடிக்க ஏற்றதாக இருக்கும். எனவே உங்களுக்கு உள்ள நேரத்தைப் பொறுத்து, இந்த கம்பு கொண்டு கூழ் தயாரித்து காலை உணவின் போது குடித்து வாருங்கள்.

உங்களுக்கு கம்பு கூழ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு கூழ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கம்பு - 1/2 கப்
* தண்ணீர் - 3 1/2 கப் + 250 மிலி
* உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மோர் - 300 மிலி
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு துணியில் கழுவிய கம்பை போட்டு பரப்பி, 1 மணிநேரம் உலர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் காய வைத்த கம்பை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 3 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதித்த பின், அதில் அரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதுவும் தொடர்ந்து 15 நிமிடம் கைவிடாமல் மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* கம்பு நன்கு வெந்து சற்று கெட்டியானதும், அதை இறக்கி முழுமையாக குளிர வைக்க வேண்டும்.
* காய்ச்சிய கம்பு நன்கு குளிர்ந்த பின், அதில் ஒரு 250 மிலி நீரை ஊற்றி மூடி வைத்து, 8 மணிநேரம் நொதிக்க வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து நன்கு கட்டிகளின்றி கிளறி, மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 300 மிலி மோரை ஊற்றி கலந்து விட வேண்டும்.
* இறுதியாக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கலந்தால், சுவையான கம்பு கூழ் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion