காராமணி சுண்டல்

By Maha

நவராத்திரிக்கு எப்போதும் கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கொண்டு சுண்டல் செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக காராமணியைக் கொண்டு சுண்டல் செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

சரி, இப்போது காராமணியைக் கொண்டு எப்படி சுண்டல் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Karamani Sundal Recipe

தேவையான பொருட்கள்:

காராமணி - 1/4 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் காராமணியை வாணலியில் போட்டு 2-3 நிமிடம் வறுத்து, பின் அதனை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து, காராமணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் உப்பு தூவி, வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, இறுதியில் சீரகப் பொடி தூவி பிரட்டி இறக்கினால், காராமணி சுண்டல் ரெடி!!!

Image Courtesy

Desktop Bottom Promotion