சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமா- எப்படி ஈஸியா செய்றது-ன்னு பாருங்க...

Posted By:

Saravana Bhavan Vellai Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாகவும், ஹோட்டல்களில் கொடுப்பதும் போன்ற சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Saravana Bhavan Vellai Kurma How To Make a Vellai Kurma Recipe

உங்களுக்கு சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 12 பல்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 1
* மராட்டி மொட்டு - 2
* கிராம்பு - 3
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காலிஃப்ளவர் - சிறிது (நறுக்கியது)
* பட்டாணி - 1/4 கப்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரி, கசகசா சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து, லேசாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, மராட்டி மொட்டு, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய காலிஃப்ளவர், பட்டாணி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி மூடி வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* காய்கறிகளானது நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமாவானது நன்கு கொதித்து, சற்று கெட்டியாகத் தொடங்கியதும், கறிவேப்பிலை, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சரவணபவன் வெள்ளை குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 22, 2024, 21:21 [IST]
Desktop Bottom Promotion