2 கப் ராகி மாவு இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. சுவையானதும்... சத்தானதும் கூட...

Posted By:

Ragi Adai Recipe In Tamil: குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சு.. இனிமே கொஞ்ச நாளைக்கு காலையில் அவசரமா சமைக்க வேண்டியிருக்காது. அதே சமயம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை வேளையில் சுவையான அதே சமயம் சத்தான ஏதாவது டிபனை செய்து கொடுக்க வேண்டும் அல்லவா? எனவே இன்று அப்படி உடலுக்கு சத்தான அதே வேளையில் ருசியான ஒரு காலை டிபனைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது தான் ராகி அடை.

இந்த அடையை காலையில் 2 சாப்பிட்டாலே போதும், வயிறும் நிறையும், டேஸ்டியாகவும் இருக்கும். அதுவும் இந்த அடையை செய்யும் போது, இதில் கொடுக்கப்பட்டுள்ள சின்ன டிப்ஸை மறக்காம ஃபாலோ பண்ணுங்க.. இதனால் அடை மிருதுவாக இருக்கும். இந்த அடைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். இந்த அடையை வாரத்திற்கு 2 முறை உட்கொண்டு வர, உடல் வலுபெறும்.

Ragi Adai How To Make a Ragi Adai Recipe

உங்களுக்கு ராகி அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு - 2 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சின்ன வெங்காயம் - 15
* பெரிய கேரட் - 1 (துருவியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* எண்ணெய் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 1/2 கப் ராகி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய 15 சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துருவிய கேரட்டை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சியையும் சேர்க்க வேண்டும்.
* பிறகு சற்று காரத்திற்கு மிளகுத் தூளை 1 டீஸ்பூன் சேர்க்க வேண்டும்.
* பின் கைகளால் நன்கு பிசைந்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதை கொதிக்கும் போதே, ராகி மாவில் ஊற்றி, கரண்டியின் பின்புறத்தால் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், அந்த மாவை கைகளால் அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். கொதிக்கும் நீரை சேர்க்கும் போது, அடை மிகவும் மிருதுவாக இருக்கும்.
* பின்னர் ஒரு வாழை இலை அல்லது ஈரமான காட்டன் துணியை எடுத்து, சிறிது மாவையும் எடுத்து, அதன் மேல் வைத்து மெல்லிய அடையாக தட்டி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி வைத்துள்ள அடையைப் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 17, 2025, 7:11 [IST]
Desktop Bottom Promotion