உருளைக்கிழங்கை வைச்சு இந்த பாயா செஞ்சு பாருங்க... சப்பாத்தி மற்றும் தோசைக்கு வேற லெவலில் இருக்கும்...!

Posted By:

Potato Paya Recipe in Tamil: இட்லி, தோசை போன்றவற்றுக்கு பொதுவாக சட்னி அல்லது சாம்பார்தான் சரியாக சைடிஷாக இருக்கும். அதேபோல ஆப்பம், இடியப்பம் போன்றவற்றுக்கு தேங்காய்ப்பால் அல்லது பாயாதான். பொதுவாக பாயா ஆட்டுக்காலில்தான் செய்வார்கள். ஏன் ஆட்டுக்காலை வைத்து மட்டும் தான் பாயா செய்ய வேண்டுமா என்ன? சைவத்தில் செய்தால் குற்றமாகி விடுமா? உருளைக்கிழங்கை வைத்தும் அற்புதமான சுவையில் பாயா செய்யலாம்.

இந்த உருளைக்கிழங்கு பாயா ஆப்பம், இடியாப்பம் மட்டுமின்றி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த சூப்பரான உருளைக்கிழங்கு பாயா செய்வதற்கு எளிதானது மற்றும் சுவையானது. குழந்தைகள் இப்போது விடுமுறையில் வீட்டில் இருக்கும் நேரத்தில் இதை செய்து கொடுப்பது அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இந்த பதிவில் சுவையான உருளைக்கிழங்கு பாயாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Potato Paya Recipe How to Prepare Potato Paya

தேவையானப் பொருட்கள்:

- உருளைக்கிழங்கு - 2
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- சமையல் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 அங்குலம்
- கிராம்பு - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- ஏலக்காய் - 1
- பிரியாணி இலை - 1
- கல்பாசி - சிறிதளவு
- சோம்பு - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க:

- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- மல்லி விதை - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2

மசாலாவுக்கு:

- தேங்காய் துருவல் - 1/4 கப்
- பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு

- கொத்தமல்லி - அலங்கரிக்க சிறிதளவு

செய்முறை:

- உருளைக்கிழங்கைக் கழுவி, தோலை உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும். அதேபோல வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி தனியாக வைக்கவும்.

- ஒரு கடாயில், எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம், மல்லி விதைகள் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும். தீயை அணைத்து, ஆற விடவும். அதன்பின் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

- தேங்காய் மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், இரண்டையும் ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

- ஒரு குக்கரில் எண்ணெயை சூடாக்கி, இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கல்பாசி, ஏலக்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

- பின்னர் அரைத்து வைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

- இதனுடன், நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்க்கவும். சிறிது நேரம் நன்கு கலக்கவும்.

- இப்போது அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிக்கன் மசாலா சேர்க்கவும்.

- தண்ணீர் நன்கு கொதித்ததும் ஒரு விசில் வரும் வரை குறைந்த தீயில் அல்லது உருளைக்கிழங்கு மென்மையாக வேகும் வரை வேகவைக்கவும்.

- நீராவி வெளியேறிய பிறகு குக்கரைத் திறக்கவும். நன்றாகக் கலந்து சுவையை சரிபார்க்கவும். தேவைப்பட்டால் உப்பு, தண்ணீர் மற்றும் மிளகாய்த் தூள் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். சிறிது நேரத்தில் இது கெட்டியாகிவிடும்.

- இந்த உருளைக்கிழங்கு பாயா சப்பாத்தி, ஆப்பம், இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, May 12, 2025, 15:57 [IST]
Desktop Bottom Promotion