குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா

Posted By:

Pichipotta Chapati Omelette Upma: தினமும் ஒரே மாதிரி சமைச்சு போரடிச்சுடுச்சா? ஒரே மாதிரியான சமையலால் உங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் அவர்கள் விரும்பி சாப்பிடும் படி, அதுவும் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களைக் கொண்டு ஒரு அசத்தலான சுவையில் ஒரு உப்புமா செய்து கொடுங்கள்.

உப்புமா என்றதும் வழக்கமாக செய்யும் ரவையைக் கொண்டு செய்யக்கூடியது என்று நினைக்க வேண்டாம். இது மீந்து போன சப்பாத்தி மற்றும் முட்டை ஆம்லெட் கொண்டு செய்யக்கூடிய உப்புமா. இந்த பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா மிகச்சிறந்த காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் இருக்கும்.

Pichipotta Chapati Omelette Upma Recipe In Tamil

உங்களுக்கு பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஆம்லெட் செய்வதற்கு...

* முட்டை - 2
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

பிற பொருட்கள்...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சப்பாத்தி - 5

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சப்பாத்திகளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதேப் போல் ஆம்லெட்டையும் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, 4-5 நிமிடம் நன்கு காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, அதில் புதினா இலைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் சப்பாத்தி, ஆம்லெட் சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி, ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 18, 2023, 16:15 [IST]
Desktop Bottom Promotion