பூரிக்கு உருளைக்கிழங்கு வெச்சு இந்த மாதிரி குருமா செய்யுங்க.. 2 பூரி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Potato Peas Kurma In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே, பெரும்பாலானோரின் வீட்டில் பூரி தான் காலை உணவாக இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? எப்போது பூரி செய்தாலும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை பூரிக்கு சைடு டிஷ் செய்வதாக இருந்தால், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி கொண்டு குருமா செய்யுங்கள்.

இப்படி குருமா செய்யும் போது, அது பூரிக்கு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த குருமாவை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குருமா குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Pattani Potato Kurma How To Make a Potato Peas Kurma

உங்களுக்கு உருளைக்கிழங்கு பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பட்டாணி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - 1 துண்டு
* பட்டை - 1 துண்டு
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* பச்சை பட்டாணி - 200 கிராம்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 6
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கல்பாசி, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, 1/2 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 7-10 நிமிடம் பட்டாணியை நன்கு வேக வைக் வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா, முந்திரி, பொட்டுக்கடலை மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பட்டாணி நன்கு வெந்ததும், அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பட்டாணி உருளைக்கிழங்கு குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 15, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion