1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..

Posted By:

Pakoda Gravy Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரி சாம்பார், புளிக்குழம்பு செய்து போரத்துவிட்டதா? சாதத்திற்கு சற்று வித்தியாசமான அதே சமயம் ருசியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறான சைடு டிஷ் செய்ய வேண்டுமா?

வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த பாசிப்பருப்பைக கொண்டு பக்கோடா கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி சாதத்துன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Pakoda Gravy How To Make a Pakoda Gravy Recipe

உங்களுக்கு பாசிப்பருப்பு பக்கோடா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு பக்கோடா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது, அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ளு கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கிரேவிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் கழுவி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வரமிளகாய், சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை சிறு சிறு பக்கோடாக்களாக எண்ணெயில் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து குறைவான தீயில் வைத்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்த தக்காளியை, சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* எண்ணெய் பிரிந்து குழம்பு நன்கு கொதிக்க தொடங்கியதும், பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பக்கோடா கிரேவி தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 17, 2024, 13:49 [IST]
Desktop Bottom Promotion