ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Oats Idly With Kara Chutney Recipe In Tamil: நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? உங்கள் உணவில் அரிசியை அதிகம் சேர்ப்பதில்லையா? அதுவும் காலையில் ஓட்ஸை தான் டிபனாக எடுக்கிறீர்களா? முக்கியமாக அந்த ஓட்ஸை கஞ்சியாக தயாரித்து பிடிக்காமல் தான் சாப்பிடுகிறீர்களா?

Oats Idly With Kara Chutney How To Make This Healthy Breakfast Recipe

அப்படியானால் இனிமேல் அப்படி சாப்பிடாமல், அந்த ஓட்ஸைக் கொண்டு இட்லி தயாரித்து சாப்பிடுங்கள். இந்த ஓட்ஸ் இட்லிக்கு கார சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். இந்த டிபனை காலை வேளையில் சாப்பிட்டால் சத்தானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும்.

இந்த ஓட்ஸ் இட்லி மற்றும் கார சட்னி குறித்து ஹெல்தி ஃபுட் ரெசிபீஸ் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த ஓட்ஸ் இட்லி மற்றும் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் இட்லி மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் இட்லிக்கு...

* உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
* பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
* இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 1 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

கார சட்னிக்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஓட்ஸை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த ஓட்ஸ் பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஓட்ஸ் பொடியுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கைகளால் நன்கு கலந்து, 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பொட்டுக்கடலையை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், கார சட்னி தயார்.
* 8 மணிநேரம் மாவு புளித்த பின், அந்த மாவை சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* அடுத்து இட்லி தட்டை எடுத்து, குழிகளில் சிறிது எண்ணெய் தடவி, அதில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை ஊற்றி, தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து, இட்லியை தட்டில் இருந்து எடுக்க வேண்டும். இப்போது சத்தான ஓட்ஸ் இட்லி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 2, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion