சங்கரா மீன் குழம்பு

By Mayura Akilan

Red Snapper fish gravy
சங்காரா மீன் செந்நிறமுடையது. இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் ஊறச் செய்யும். எளிதில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

சங்கரா மீன் – 5

கனிந்த தக்காளி சிறியது – 3

புளி - சிறிய எலுமிச்சை அளவு

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

மிளகாய்த்தூள் - 3 டீ ஸ்பூன்

மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்

நல்லெண்எண்ணெய் – 4 டீ ஸ்பூன்

கடுகு - 1/2 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டீ ஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்

பெருங்காயம் – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை மாவு போட்டு நன்கு உரசி கழுவிக்கொள்ளவும். தலை, வால், என தனித் தனியாக மூன்று துண்டுகளாக்கவும்.

மீன் துண்டுகளை மஞ்சள் உப்பு போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அடுப்பில் அகலமான வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் சின்னவெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய உடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அத்துடன் தக்காளி சேர்த்து குழைய வேக விடவும். இதனுடன் மிளகாய், மல்லி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதித்து மசாலா வாசனை போனபின்பு மீன் போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் கழித்து குழம்பை இறக்கி விடலாம் மீன் வெந்து விடும். தாளிக்கும் கரண்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த உடன், கறிவேப்பிலை, கடுகு, சீரகம், வெந்தையம், சிறிதளவு சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். அதில் பெருங்காயத்தூள் சிறிதளவு வாசனைக்கு சேர்த்து குழம்பில் கொட்டவும். சுவையான சங்கரா மீன் குழம்பு தயார். சூடான சாதத்திற்கு ஏற்ற குழம்பு இது.

Desktop Bottom Promotion