நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..

Posted By:

Neer Dosa With Thanni Chutney Recipe In Tamil: காலையில் டிபன் செய்ய இட்லி, தோசை மாவு எதுவும் இல்லையா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியரா? இதனால் பெரும்பாலும் டிபன் நேரத்தில் தோசையை தான் கேட்பார்களா? அப்படியானால் 1 கப் பச்சரிசி இருந்தால், அதைக் கொண்டு பஞ்சு போன்று மென்மையான நீர் தோசையை சுட்டு சாப்பிடலாம். இந்த நீர் தோசை செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையும் பிரமாதமாக இருக்கும். அதுவும் இந்த தோசைக்கு தண்ணி சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால், இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

Neer Dosa With Thanni Chutney How To Make This Delicious Breakfast Recipe

உங்களுக்கு நீர் தோசையும், தண்ணி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நீர் தோசை மற்றும் தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

நீர் தோசைக்கு...

* பச்சரிசி - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தண்ணி சட்னிக்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 1 பெரிய பல்
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்துக் கொண்டு, நீரில் 3-4 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் நீரை ஊற்றி 4-5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அரிசி நன்கு ஊறிய பின், நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் அரிசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, அதில் 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு மற்றும் புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு, அத்துடன் துருவிய தேங்காய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, தண்ணி சட்னிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தண்ணி சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை கரண்டியால் நன்கு கிளறி, ரவா தோசை சுடுவது போன்று கல்லில் மாவை அள்ளி ஊற்ற வேண்டும். பின் மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 1 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, தோசையை மடித்து எடுத்தால், சுவையான பஞ்சு போன்ற நீர் தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 25, 2026, 6:30 [IST]
q
Desktop Bottom Promotion