கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Kovai Special Uppu Paruppu: மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாக அதே சமயம் ருசியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் அதிக காரம் இல்லாமல் சிம்பிளான சைடு டிஷ் செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு செய்து சாப்பிடுங்கள்.

இந்த பருப்பு செய்வதற்கு வெங்காயம், தக்காளி என்று எதுவுமே தேவையில்லை. துவரம் பருப்பு இருந்தாலே போதும், 10 நிமிடத்தில் செய்துவிடலாம். இந்த உப்பு பருப்பை சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி, ஊறுகாய் மற்றும் அப்பளத்தை தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Kovai Special Uppu Paruppu How To Make Uppu Paruppu Recipe

உங்களுக்கு இந்த கோவை ஸ்பெஷன் உப்பு பருப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உப்பு பருப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்

இடிப்பதற்கு...

* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 1
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

தாளிப்பதற்கு...

* நெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* இடித்த பொருட்கள்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த பருப்பு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் துவரம் பருப்பை எடுத்துக் கொண்டு, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மீண்டும் 1 கப் நீர், பெருங்காயத் தூள் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடி உரலில் பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 24, 2026, 14:48 [IST]
q
Desktop Bottom Promotion