2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தண்ணி குழம்பு வையுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Murungaikeerai Thanni Saaru Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோரின் இரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக உள்ளதா? பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்களா? அப்படியானால் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வாருங்கள். அதுவும் முருங்கைக்கீரை சட்னி, துவையல் என்று செய்வது மட்டுமின்றி, அதைக் கொண்டு மதிய வேளையில் தண்ணி சாறு செய்து கொடுங்கள்.

Murungaikeerai Thanni Saaru How To Make Drumstick Leaves Kuzhambu

இப்படி முருங்கைக்கீரை தண்ணி சாறு செய்து கொடுக்கும் போது, உடலில் இரும்புச்சத்து அதிகரித்து, இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும், வாய்ப்புண், குடல் புண் மற்றும் வயிற்று புண்களும் ஆறும். முக்கியமாக இந்த தண்ணி குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த முருங்கைக்கீரை தண்ணி சாறு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை தண்ணி சாறு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
* தண்ணீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 1 பல்

குழம்பு செய்வதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3 (விதைகளை நீக்கியது)
* சின்ன வெங்காயம் - 15-20 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* அரிசி கழுவிய நீர் - 1/2 லிட்டர்
* வேக வைத்த பருப்பு
* அரைத்த தேங்காய் விழுது
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1 கப்
* சின்ன வெங்காயம் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் 1 பல் பூண்டு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் 1 கப் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் விதைகளை நீக்கிய வரமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரிசி கழுவிய நீரை ஊற்றி, அத்துடன் வேக வைத்த பருப்பை கரண்டியால் மசித்து சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, அதோடு பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் கழுவி வைத்துள்ள 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை தண்ணி குழம்பு தயார்.

சமையல் டிப்ஸ்...

* அரிசி கழுவிய நீரை பெறுவது எப்படி? அரிசியை முதல் முறை கழுவும் தண்ணீரை ஊற்றிவிட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை நன்றாகக் கழுவி எடுக்கும் தண்ணீரை இந்த சாறு வைக்கப் பயன்படுத்த வேண்டும். இதில் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன.

* முருங்கைக்கீரையை குழம்பில் சேர்த்த பிறகு மூடி போட்டு வேக வைக்கக் கூடாது. மூடி வைத்தால் கீரையின் நிறம் மாறிவிடும். கீரையைச் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் மிதமான தீயில் திறந்தே வேக வைத்தால் அதன் சத்துக்களும் பச்சை நிறமும் மாறாமல் அப்படியே இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 16, 2026, 13:10 [IST]
Desktop Bottom Promotion