நீங்க வெக்குற சாம்பார் டேஸ்ட்டே இருக்காதா? அப்ப இந்த மாதிரி ஒருடைம் சாம்பார் செய்யுங்க..

Posted By:

Manga Murungakai Sambar Recipe In Tamil: நீங்கள் வைக்கும் சாம்பார் எப்போதும் சுவையாக இருக்காதா? எப்போது சாம்பார் செய்தாலும் ருசி இல்லாமல் இருக்குமா? நீங்கள் சாம்பார் செய்கிறேன் என்றாலே வீட்டில் உள்ளோர் பயப்படுவார்களா? அப்படியானால் அடுத்தமுறை சாம்பார் செய்யும் போது இந்த மாதிரி செய்யுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு முருங்கைக்காய், மாங்காய் கொண்டு சாம்பார் வைக்கும் போது ருசி இன்னும் அற்புதமாக இருக்கும். மேலும் எப்போதும் சாம்பார் வைக்கும் போது ஒரே ஒரு காய்கறியை மட்டும் பயன்படுத்தாமல், 2-3 காய்கறிகளை சேர்த்து செய்யும் போது சுவை இன்னும் நன்றாக இருக்கும்.

Manga Murungakai Sambar How To Make a Raw Mango Drumstick Sambar Recipe

உங்களுக்கு மாங்காய் முருங்கைக்காய் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் முருங்கைக்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பருப்பு வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

சாம்பாருக்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* கத்திரிக்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* மாங்காய் - 4-5 துண்டு
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நன்கு நீரில் 2 முறை கழுவி, குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு கடைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து சாம்பார் தூளை சேர்த்து கிளறி, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் கொதிக்க ஆரம்பிக்கும் போது, மாங்காய் துண்டுகளை சேர்த்து, புளிச்சாற்றினை ஊற்றி, பின் வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* புளிச்சாற்றின் பச்சை வாசனை போனதும், வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மாங்காய் முருங்கைக்காய் சாம்பார் தயார்.

Image Courtesy: Gomathi's Kitchen

[ of 5 - Users]
Story first published: Friday, April 26, 2024, 13:52 [IST]
Desktop Bottom Promotion