இட்லி, தோசைக்கு ஏற்ற மதுரை தக்காளி தண்ணி சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Madurai Thakkali Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தக்காளி சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா?

அப்படியானால் இன்று அவர்களுக்கு மதுரை தக்காளி தண்ணி சட்னியை செய்து கொடுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். முக்கியமாக வீட்டிற்கு நிறைய விருந்தினர்கள் வந்திருக்கும் போது இந்த சட்னியை செய்தால், நல்ல பாராட்டைப் பெறலாம்.

Madurai Thakkali Thanni Chutney How To Make a Madurai Tomato Chutney

உங்களுக்கு மதுரை தக்காளி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை தக்காளி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* புளி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3 (நறுக்கியது)
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* வரமிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* பொட்டுக்கடலை - 25 கிராம்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சியை தட்டி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி வரமிளகாய் மற்றும் சாதாரண வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் 1/2 மூடி துருவிய தேங்காயை சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய மற்ற பொருட்களை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொட்டுக்கடலையை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தண்ணி சட்னி என்பதால், சற்று அதிகமாகவே தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான மதுரை தக்காளி தண்ணி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, May 22, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion