மீந்து போன சாதம் இருந்தா.. காலையில இப்படி அடை செஞ்சு சாப்பிடுங்க.. அருமையா இருக்கும்...

Posted By:

Leftover Rice Adai Recipe In Tamil: உங்கள் வீட்டில் மீந்து போன சாதம் அதிகமா இருக்கா? அதை தூக்கி போட மனம் இல்லையா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் அடை செய்யுங்கள். இந்த அடையை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த அடைக்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவையில்லை. அப்படியே கூட சாப்பிடலாம். ஒருவேளை சைடு டிஷ் வேண்டுமானால் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி அடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leftover Rice Adai How To Make a Left Over Rice Adai Recipe

தேவையான பொருட்கள்:

* சாதம் - 1 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 3/4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 10-15
* துருவிய தேங்காய் - 1 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சாதத்தைப் போட்டு, மிகவும் மென்மையாக அரைக்காமல் ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, துருவிய தேங்காய், கடலை மாவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கையால் பிசைந்து விட வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லை சூடேற்ற வேண்டும்.
* அதன் பின் பிசைந்த கலவையை சிறிது எடுத்து உருட்டி, ஒரு வாழை இலை/கவரை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, உருட்டிய உருண்டையை வைத்து கையால் தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை தோசைக் கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான அடை தயார். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுக்க வேண்டும்.

Image Courtesy: Kannamma Cooks

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 2, 2024, 7:34 [IST]
Desktop Bottom Promotion