உடல் கொழுப்பைக் குறைக்கும் கொள்ளு குழி பணியாரத்தை எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Kollu Kara Kuzhi Paniyaram Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது வீட்டில் உள்ளோருக்கு பணியாரம் செய்து கொடுங்கள். அதுவும் உடலுக்கு சத்தை கொடுக்கும் வகையில் கொள்ளு வீட்டில் இருந்தால், அதைக் கொண்டு பணியாரம் செய்து கொடுங்கள்.

இந்த பணியாரம் உடலில் உள்ள கொழுப்புக்களைக் குறைக்க உதவும், உடலை வலுவாக்கும். இந்த பணியாரத்திற்கு மாவை அரைத்து வைத்துக் கொண்டால், தேவையான போது பணியாரத்தை சுட்டுக் கொள்ளலாம்.

Kollu Kara Kuzhi Paniyaram How To Make a Kollu Kuzhi Paniyaram Recipe

உங்களுக்கு கொள்ளு கார குழி பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு கார குழி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* கொள்ளு - 1 1/2 கப்
* மாவு பச்சரிசி - 1 கப்
* இட்லி அரிசி - 1 கப்
* உளுந்து - 3/4 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு, பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் நீரை ஊற்றி, குறைந்தது 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 6 மணிநேரம் கழித்து, அரிசியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு கலந்துவிட்டு, 8 மணிநேரம் மூடி வைத்து புளிக்க வைக்க வேண்டும்.
* மாவு நன்கு புளித்ததும், கரண்டியால் நன்கு கலந்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து, மாவுடன் சேர்த்து கிளறினால், பணியார மாவு தயார்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் குழிகளில் சிறிது எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, குறைவான தீயில் வைத்து பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கொள்ளு கார குழிப் பணியாரம் ரெடி.

Image Courtesy: Apoorvaa's Virundu

[ of 5 - Users]
Story first published: Friday, September 6, 2024, 7:30 [IST]
Desktop Bottom Promotion