கருணைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க...!

Posted By:

Karunai Kilangu Cutlet Recipe in Tamil: கிழங்கு வகைகள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது உருளைக்கிழங்குதான். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு என பல வகையான சுவையான கிழங்கு வகைகள் உள்ளது. ஆனால் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடும் அளவிற்கு யாரும் மற்ற கிழங்குகளை விரும்பி சாப்பிடுவதில்லை.

அதுபோன்ற சூழலில் இந்த கிழங்குகளை சுவையான வடிவில் செய்து கொடுக்க வேண்டியது அவசியம். எனவே இந்த கருணைக்கிழங்கை சூப்பரான கட்லெட் செய்து கொடுத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கருணைக்கிழங்கு கட்லெட் செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். மொறுமொறுவென ஆரோக்கியமான கருணைக்கிழங்கு கட்லெட் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Karunai Kilangu Cutlet Recipe How to Make Karunai Kilangu Cutlet

தேவையானப் பொருட்கள்:

- கருணைக்கிழங்கு - 200 கிராம்
- பூண்டு - 8 பல்
- இஞ்சி - அரை அங்குலத் துண்டு
- சோம்பு - ஒரு ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- கடலை மாவு - ஒரு கப்
- பெரிய வெங்காயம் - 3
- கொத்தமல்லி - 2 கொத்து
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

- இஞ்சியை தோல் சீவி வைத்துக் கொள்ளவும் மற்றும் பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்

- மற்ற அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

- பூண்டு, சோம்பு, சீரகம், இஞ்சி சேர்த்து மிக்சியில் மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

- கருணைக்கிழங்கை நன்றாக கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி குக்கரில் வைத்து விசில் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

- அரிசி களைந்த தண்ணீரில் கிழங்கை வேகவைத்தால் சாப்பிடும் போது அரிக்காமல் இருக்கும்

- பிறகு கருணைக்கிழங்கு வெந்ததும் தோல் உரித்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்

- வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.அதன் பிறகு அரைத்து வைத்த விழுது மற்றும் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்

- ஒரு நிமிடம் கழித்து மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.

- பிறகு தோசைமாவு பதத்தில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி 2 நிமிடம் கிளறவும். 2 நிமிடம் கழித்து வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆனதும் மேலே கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் செய்த கலவையை போட்டு பரப்பி விடவும்

- பிறகு அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இதை அப்படியே எண்ணெயில் போடலாம், இல்லையென்றால் தட்டி கட்லெட் போலவும் எண்ணெயில் போடலாம்.

- இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்து சூடாக சாப்பிடலாம். கருணைகிழங்குக்குப் பதிலாக உருளைக்கிழங்கை வைத்தும் செய்யலாம்.

- கருணைக்கிழங்கு பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 5, 2025, 17:24 [IST]
Desktop Bottom Promotion