ஜவ்வரிசி வடகம் ரெசிபி... வெயில் காலம் முடியறதுக்குள்ள இதை செஞ்சுருங்க... ரொம்ப நாளைக்கு யூஸ் ஆகும்...!

Posted By:

Javvarisi Vadagam Recipe in Tamil: வெயில் காலம் முடிய போகுது. வெயில் சுட்டெரிக்குது, அக்கினி கொழுந்துவிட்டு எரியுதுன்னு என்னதான் நாம் புலம்பி கொண்டிருந்தாலும், இந்த வெயிலை வீணாக்காமல் வீட்டிற்கு தேவையான சில பொருட்களை தயார் செய்து கொள்வோம்.

மோர் மிளகாய், வத்தல், மற்றும் வடகம் என பலவற்றை வீட்டிலேயே செய்து காயவைத்து வருடத்திற்கே சேமித்து வைத்து கொள்வோம். அந்த வரிசையில் எப்போதும் செய்யும் வடகத்திற்கு மாற்றாக இந்த ஜவ்வரிசி வடகம் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

Javvarisi Vadagam Recipe How to Prepare Javvarisi Vadagam

தேவையான பொருட்கள்:

- ஜவ்வரிசி - 1 கப்
- பச்சை மிளகாய் - 5
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- எலுமிச்சை - ½ பழம்
- தண்ணீர் - 5 கப்
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.

- பின் ஜவ்வரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

- ஜவ்வரிசி நன்றாக ஊறி இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.

- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி கொள்ளவும்.

- அடி கனமான ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அடி கனமான பாத்திரம் இல்லை என்றால் குக்கரை பயன்படுத்துங்கள்.

- தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அதனுடன் சீரகம் சேர்க்கவும். பின் நன்றாக ஊற வைத்த ஜவ்வரிசியைச் சேர்த்து கிளறவும்.

- அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடுங்கள்.

- ஜவ்வரிசி நன்றாக வெந்து வர சுமார் 8-10 நிமிடங்கள் எடுக்கும்.

- அதற்கும் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து கொள்ளவும். அதை ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

- சுவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பை ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.

- பின் ஜவ்வரிசி கீர் பதத்திற்கு கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

- அது சூடு குறைந்ததும் இறுகிவிடும் என்பதால் அதிக கெட்டியாக இருக்கக் கூடாது. கடைசியாக பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

- ஒரு வெள்ளைத் துணியை தண்ணீரில் நனைத்து, முழுவதுமாகப் பிழிந்து, எந்தச் சுருக்கமும் இல்லாமல் எடுத்து கொள்ளுங்கள்.

- உங்கள் வீட்டில் நன்றாக வெயில் படும் இடத்தில் துணியை விரிக்கவும்.

- ஆறிய ஜவ்வரிசியை கரண்டியில் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி மிகவும் தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இல்லாமல் பரப்பி ஒரு நாள் காயவிடவும்.

- நன்றாக காயவில்லை என்றால் இன்னொரு நாள் காயவிடவும்.

- வெயிலில் நன்றாக காய்ந்திருந்தால் நீங்கள் எடுக்கும் போது எளிதாக வரும்.

- சில நேரங்களில் அவை துணியில் ஒட்டிக் கொண்டு வரவில்லை என்றால் துணியின் பின்புறத்தில் சிறிது தண்ணீர் தெளித்து எடுத்தால் எளிதாக வரும்.

- பின் வடகத்தை ஒரு தட்டு அல்லது துணியின் மீது போட்டு வெயிலில் 3 முதல் 4 நாட்களுக்கு உலர்த்தவும்.
பின் வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காயவிடவும்.

- எண்ணெய் காய்ந்ததும் வடகத்தில் ஒன்றை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

- வடகம் நன்றாக காய்ந்திருந்தால் அது மொறுமொறுப்பாக இருக்கும், இல்லையென்றால் நீங்கள் சாப்பிடும் போது பற்களில் ஒட்டிக் கொள்ளும்.

- மீண்டும் அவற்றை வெயில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டால் சுவையான ஜவ்வரிசி வடகம் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 13, 2025, 17:50 [IST]
Desktop Bottom Promotion