இட்லிக்கு ஒருமுறை இப்படி ஆட்டுக்கால் தண்ணி குழம்பை செஞ்சு சாப்பிடுங்க.. சுவை வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Aatukkaal Thanni Kuzhambu Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி செய்து, மட்டன் அல்லது சிக்கன் வாங்கி குழம்பு செய்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று வித்தியாசமாக ஆட்டுக்காலை வாங்கி தண்ணி குழம்பு செய்யுங்கள்.

இந்த ஆட்டுக்கால் தண்ணி குழம்பு மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த குழம்பை காலையில் இட்லி, தோசைக்கு செய்தால், மதியம் சாதத்துடனும் சாப்பிடலாம்.

Goat Leg Curry How To Make a Aatukkaal Thanni Kuzhambu Recipe

உங்களுக்கு ஆட்டுக்கால் தண்ணி குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டுக்கால் தண்ணி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஆட்டுக்கால் - 1 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* முந்திரி - 5-6
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4-5

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு -2
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - சிறிய துண்டு
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு தூள் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஆட்டுக்காலின் மேலே உள்ள கருப்பான தோலை கத்தியால் ஒருமுறை சுரண்டிவிட்டு, பின் கல் உப்பு சேர்த்து ஆட்டுக்காலை நன்கு நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய ஆட்டுக்காலை எடுத்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் ஆட்டுக்கால் மூழ்கும் அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 15-20 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, ஆட்டுக்கால் மூழ்கும் அளவு சுடுநீரை ஊற்றி மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அதிலிருந்து ஆட்டுக்கால் சூப்பை எடுத்து, வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு கொடுக்கலாம்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், கொத்தமல்லி, முந்திரி, சோம்பு, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கியதும், குக்கரில் உள்ள ஆட்டுக்காலை சூப்புடன் சேர்த்து கிளறி, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் குழம்புத் தூளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ஆட்டுக்கால் தண்ணி குழம்பு தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Sunday, July 14, 2024, 9:10 [IST]
Desktop Bottom Promotion