வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..

Posted By:

Onion Tomato Kurma In Tamil: உங்கள் வீட்டில் இட்லி தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் குருமா செய்யுங்கள். அதுவும் வெங்காயம் மற்றும் தக்காளியை மட்டும் கொண்டே அற்புதமான சுவையில் குருமாவை செய்யுங்கள். இந்த குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Empty Kurma How To Make Onion Tomato Kurma For Idli Chapati

ஒருமுறை இந்த குருமாவை செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள். முக்கியமாக இப்படிப்பட்ட குருமாவை பேச்சுலர்களும், வேலைக்கு செல்பவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த அளவில் இந்த குருமா செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த வெங்காய தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைப்பதற்கு...

* பெரிய வெங்காயம் - 1
* நறுக்கிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* முந்திரி - 4-5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 3
* அன்னாசிப்பூ - 1/2
* பிரியாணி இலை - 1
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி, சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான ப்ளைன்/தக்காளி வெங்காய குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 25, 2026, 21:39 [IST]
Desktop Bottom Promotion