தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா?

தங்கம் என்பது மற்ற நாடுகளில் முதலீடாக பார்க்கப்பட்டாலும் இந்தியர்களைப் பொறுத்தவரை அது கௌரவம் மற்றும் செல்வாக்கின் அடையாளமாக உள்ளது. பெரும்பாலானா மக்கள் விரும்பும் இந்த விலைமதிப்பற்ற மஞ்சள் உலோகம், உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. ஆனால் ஒரு உலோகம் தங்கத்தை விட பல மடங்கு விலை மதிப்பற்றதாக உள்ளது உங்களுக்குத் தெரியுமா?

Most Expensive Metal Which Is 20 Times Costlier Than Gold

தங்கத்தை விட மதிப்புமிக்கது எனும் போது அது வைரமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது தவறு. உலகின் மிக விலையுயர்ந்த உலோகமான 'ஆஸ்மியம்', பூமியில் மிகவும் அரிதான உலோகங்களில் ஒன்றாக இருப்பதோடு, தங்கத்தை விட சுமார் 20 மடங்கு அதிக விலை கொண்டதாக கருதப்படுகிறது. மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய இந்த படிக வடிவ உலோகத்தைப் பற்றியும், இது ஏன் இவ்வளவு அரிதாகவும் விலையுயர்ந்ததாகவும் இருக்கிறது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் மிக விலையுயர்ந்த உலோகத்தின் விலை என்ன?

பூமியில் இயற்கையாகக் கிடைக்கும் 92 தனிமங்களில் அதிக அடர்த்தி கொண்ட தனிமமான 'ஆஸ்மியம்' (Osmium), உலகின் மிக விலையுயர்ந்த உலோகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரு கிராமின் விலை சுமார் 2,100 யூரோக்கள் (இந்திய ரூபாயில் ரூ. 2.29 லட்சம்) ஆகும். அதாவது ஒரு கிலோகிராமின் விலை சுமார் 23 கோடி ரூபாயாக உள்ளது. இது தங்கத்தின் தற்போதைய விலையை விட 20 மடங்கு அதிகமாகும். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ரோடியம், இரிடியம் மற்றும் தங்கம் ஆகியவை உள்ளன.

ஆஸ்மியம் ஏன் விலை உயர்ந்ததாக உள்ளது?

ஆஸ்மியம் ஒரு தனித்துவமான படிக அமைப்பைக் கொண்டுள்ளதால், அதைப்போலப் போலியான ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினமானதாகும். மேலும் அதன் அதிக அடர்த்தி காரணமாக, மேம்பட்ட மருத்துவம், மின்னணுவியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகள் போன்ற சிறப்புத் துறைகளில் இது விலைமதிப்பற்றதாகத் திகழ்கிறது. ஹைட்ரஜனேற்றச் செயல்முறைகளில் வினையூக்கியாகப் பயன்படும் ஆஸ்மியம், செயற்கை இதய வால்வுகள் மற்றும் இதயத் துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் போன்றவற்றை உருவாக்குவதிலும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.

ஆஸ்மியம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

ஆஸ்மியம் ஆபரணங்களில் பயன்படுத்தப்பட்டாலும், ஃபவுண்டன் பேனாக்களின் முனைகள், அதிக தேய்மானத்திற்கு உள்ளாகும் இயந்திரப் பாகங்கள் மற்றும் மின் தொடர்புகள் போன்ற சிறப்பு வாய்ந்த பொருட்களிலேயே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஈயத்தை விட இருமடங்கு அடர்த்தி கொண்டதாக இருப்பதால், இதன் கட்டமைப்பை எவ்வகையிலும் சுருக்கவோ அல்லது அழுத்தவோ முடியாது என்பதே இதற்குக் காரணமாகும்.

ஆஸ்மியத்தை கண்டுபிடித்தது யார்?

1803-ஆம் ஆண்டில், பிளாட்டினம் தாதுவை 'அக்வா ரீஜியா' கரைசலில் கரைத்தபோது எஞ்சியிருந்த கருப்பு நிறக் கழிவிலிருந்து, ஸ்மித்சன் டென்னன்ட் என்பவர் இரிடியத்துடன் சேர்த்து ஆஸ்மியத்தைக் கண்டறிந்தார். புவியின் மேலோட்டில் காணப்படும் நிலையான தனிமங்களிலேயே மிகவும் அரிதான தனிமமான இது, முக்கியமாக தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் ரஷ்யாவில் நிக்கல் மற்றும் செம்புச் சுரங்கப் பணிகளின்போது ஒரு துணை விளைபொருளாகக் கிடைக்கிறது.

தங்கத்தை விட ஏன் விலை உயர்ந்ததாக உள்ளது?

ஒரு கிராம் படிக வடிவ ஆஸ்மியம் தங்கத்தை விடக் குறைந்தது 17 மடங்கு அதிக விலை கொண்டது; ஏனெனில், எளிதில் கிடைக்கக்கூடிய தங்கத்துடன் ஒப்பிடுகையில், நீல-வெள்ளை நிறத்திலான இந்த உலோகம் சுமார் 1,500 மடங்கு அரிதானது. ஆடம்பர நகைகள் தயாரிப்பு மற்றும்தனித்துவமான பொருட்களின் தயாரிப்பு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுவதே ஆஸ்மியத்தின் இந்த அதிக விலைக்கான காரணமாகும்.

Story first published: Tuesday, August 25, 2026, 21:02 [IST]
Desktop Bottom Promotion