செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க..

Posted By:

Chettinad Prawn Thokku Recipe In Tamil: கடல் உணவுகளில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீனை விட இறால் தான் ரொம்ப பிடிக்குமா? எப்போது இறால் வாங்கினாலும், அதைக் கொண்டு கிரேவி, மசாலா, ப்ரை என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இறால் வாங்கினால், அதைக் கொண்டு செட்டிநாடு இறால் தொக்கு செய்யுங்கள். இந்த தொக்கு செய்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை வேற லெவலில் இருக்கும்.

Chettinad Prawn Thokku How To Make Chettinad Eral Thokku Recipe

உங்களுக்கு இந்த செட்டிநாடு இறால் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு இறால் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* இறால் - 1 கிலோ
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மசாலாவின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இறாலை கழுவி சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சீரகத் தூள் சேர்த்து, கறிவேப்பிலை தூவி கிளறி மூடி வைத்து 5 நிமிடம் இறாலை நன்கு வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், இறால் நீர்விட்டு வெந்திருக்கும். பின் வாணலியை திறந்து வைத்தவாறே கிளறி விட்டு, நீர் வற்றி எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு இறால் தொக்கு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 26, 2026, 7:50 [IST]
Desktop Bottom Promotion