மட்டன் கொத்துக்கறி வாங்கி இப்படி ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்..

Posted By:

Chettinad Mutton Kothukari Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் பிடித்த அசைவ உணவுகளை சமைத்து பொறுமையாக சாப்பிடலாம். இன்று ஸ்பெஷலாக என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

அப்படியானால் மட்டன் கொத்துக்கறியை வாங்கி, அதை கொண்டு அட்டகாசமான சுவையில் செட்டிநாடு சமையலை செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு மட்டன் கொத்துக்கறி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Chettinad Mutton Kothukari How To Make a Chettinad Mutton Kothukari Recipe

உங்களுக்கு செட்டிநாடு மட்டன் கொத்துக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மட்டன் கொத்துக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 1 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் வெட்டியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

வறுத்து பொடி செய்வதற்கு...

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* வரமிளகாய் - 6

செய்முறை:

* முதலில் மட்டன் கொத்துக்கறியை நீரில் 2 முறை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு மசாலா பொடியை தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் மல்லி, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சோம்பு, கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி, மட்டனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை மீண்டும் அடுப்பில் வைத்து, உயர் தீயில் வைத்து மட்டனை நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் கொத்துக்கறி தயார்.

Image Courtesy: Foods of India

[ of 5 - Users]
Story first published: Sunday, June 9, 2024, 9:11 [IST]
Desktop Bottom Promotion