செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Chettinad Kara Kuzhi Paniyaram With Thakkali Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை கார பணியாரம் செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு கார குழிப்பணியாரம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னியை செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Chettinad Kara Kuzhi Paniyaram With Thakkali Chutney How To Make This Healthy Breakfast

உங்களுக்கு இந்த செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கார குழிப்பணியாரம் மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

குழிப்பணியாரத்துக்கு...

* பச்சரிசி - 1 கப்
* இட்லி அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

பணியார தாளிப்புக்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3-4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

தக்காளி சட்னிக்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* பூண்டு - 2 பல்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

சட்னி தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த சட்னி
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை எடுத்து, நீரில் 2 முறை கழுவி, பின் நீரை ஊற்றி, 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்ததை மிக்சர் ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* மாவு நன்கு புளித்த பின், அந்த மாவை கரண்டியால் நன்கு கிளறி, பாதி மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி வதக்கி இறக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், செட்டிநாடு கார குழிப்பணியாரம் தயார்.
* பின்னர் சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சாம்பார் பொடியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி வதக்கி, குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை ஜாரில் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 9, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion