பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..

Posted By:

Bangalore Special Neer Chutney Recipe In Tamil: உங்க வீட்டில் இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி தான் செய்வீர்களா? அதுவும் அடிக்கடி தேங்காய் சட்னியை செய்வீர்களா? தேங்காய் சட்னி அனைத்துவிதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான சட்னி. இந்த சட்னியை ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதத்தில் செய்வார்கள். ஆனால் எப்படி செய்தாலும், தேங்காய் சட்னியின் சுவையே தனி தான்.

Bangalore Special Neer Chutney How To Make Bangalore Coconut Neer Chutney

அதுவும் பெங்களூருவில் செய்யக்கூடிய நீர் சட்னி என்னும் தண்ணி சட்னியை இட்லியுடன் ஊற்றி குலைத்து சாப்பிடும் போது, சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் இந்த பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னியை செய்து கொடுங்கள். 2 இட்லி சாப்பிடும் உங்கள் பிள்ளைகள் கூட 1 இட்லி எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். சொல்லப்போனால் சட்டென்று 5 நிமிடத்தில் செய்துவிடலாம்.

இந்த பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி குறித்து rk_recipes_bowl என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 1 பல்
* வெங்காயம் - 2 துண்டு
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - 6 இலைகள்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் 4 பச்சை மிளகாய், 1 இன்ச் இஞ்சி, 1 பல் பூண்டு மற்றும் 2 துண்டு வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் பொட்டுக்கடலையும், 1/4 கப் துருவிய தேங்காயும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை கொஞ்சமாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* சட்னியானது கெட்டியாக இல்லாமல் நீராக இருக்க வேண்டும். அதற்கேற்ப நீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 19, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion