அவரைக்காயை வெச்சு இந்த மாதிரி சாம்பார் செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...

Posted By:

Avarakkai Sambar Recipe In Tamil: இன்று கார்த்திகை தீபம் என்பதால், பலரும் வீடுகளில் அசைவம் சமைக்கமாட்டோம். விடுமுறை நாட்களில் அசைவம் சமைக்காமல், சைவம் சமைக்க வேண்டுமானால் என்ன சமைப்பது என்று யோசித்து முடிவு எடுக்கவே நேரம் எடுக்கும்.

நீங்களும் அப்படி யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த அவரைக்காயைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். இந்த அவரைக்காய் சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Avarakkai Sambar Recipe

மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு அவரைக்காய் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே அவரைக்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1/2 கப்
* அவரைக்காய் - 10
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* சாம்பார் தூள் - 2 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்து, பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் துவரம் பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அவரைக்காயின் முனைகளை நீக்கிவிட்டு, சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வெங்காயம் மற்றும் தக்காளியையும் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அவரைக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து மீண்டும் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அவரைக்காய் நன்கு வெந்ததும், வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான அவரைக்காய் சாம்பார் தயார்.

Image Courtesy: rakskitchen

[ of 5 - Users]
Story first published: Sunday, November 26, 2023, 12:00 [IST]
Desktop Bottom Promotion