இட்லி, தோசை மாவு இல்லையா? 1 கப் பச்சரிசி வெச்சு காலையில் இப்படியொரு காலை டிபனை செஞ்சு பாருங்க...

Posted By:

Arisi Upma Recipe: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் பச்சரிசி இருந்தால், அதைக் கொண்டு அரிசி உப்புமா செய்யுங்கள். இந்த அரிசி உப்புமா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக காலையில் ஆரோக்கியமான டிபனை சாப்பிட நினைத்தால், இந்த அரிசி உப்புமாவை செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு அரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Arisi Upma How To Make a Arisi Upma Recipe

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 டம்ளர்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 3 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

செய்முறை:

* முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் 2 முறை கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, ஒரு வட்டியில் போட்டு 20 நிமிடம் அப்படியே உலர விட வேண்டும்.
* பின்பு அவற்றை மிக்சர் ஜாரில் எடுத்து, அத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து, ரவா பதத்திற்கு ஒருமுறை லேசாக அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பருப்பு பொன்னிறமானதும், அதில் பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, 3 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், பொடித்து வைத்துள்ள அரிசியை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* நீர் ஓரளவு வற்றியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது, அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* 10 நிமிடம் ஆனதும், அடுப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறந்து, உப்புமாவை கிளறி விட வேண்டும். பின் மீண்டும் மூடி வைத்து 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, அதன் பின் பரிமாறினால், சுவையான அரிசி உப்புமா தயார்.

Image Courtesy: Vidhya's Vegetarian Kitchen

[ of 5 - Users]
Story first published: Monday, July 8, 2024, 7:11 [IST]
Desktop Bottom Promotion