சாதத்துக்கு ஒருமுறை இந்த அரைச்சுவிட்ட சாம்பாரை செய்யுங்க.. அப்புறம் எப்பவும் இப்படி தான் செய்வீங்க...

Posted By:

Araichuvitta Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் சாம்பார் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சாம்பார் செய்வதாக இருந்தால், மசாலாவை அரைத்து ஊற்றி செய்யுங்கள்.

இப்படி சாம்பாருக்கு மசாலாவை அரைத்து சேர்க்கும் போது, சாம்பாரின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த அரைச்சுவிட்ட சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Araichuvitta Sambar How To Make a Araichuvitta Sambar Recipe

உங்களுக்கு அரைச்சுவிட்ட சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

சாம்பாருக்கு...

* துவரம் பருப்பு - 100 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* விருப்பமான காய்கறிகள் - 300 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 1
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மல்லி, துருவிய தேங்காய், கடலைப் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நல்ல மணம் வரும் வரை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு துவரம் பருப்பை நீரில் கழுவி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை சேர்த்து, அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தக்காளி மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, அப்படியே தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள் மசாலாவை சேர்த்து, மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி, காய்கறிகள் வெந்ததும், அதில் பருப்பு வேக வைத்த நீரை மட்டும் ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்த பின், பருப்பை சேர்த்து, அதைத் தொடர்ந்து 2 டேபிள் ஸ்பூன் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான அரைச்சுவிட்ட சாம்பார் தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Saturday, July 13, 2024, 14:37 [IST]
Desktop Bottom Promotion