பெற்றால் மட்டும் போதுமா? நாட்டுக்கு நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்?

நல்லபடியாக குழந்தைகளை வளர்க்க நீங்கள் செய்ய வேண்டிய முதல் கடமை என்ன என்று இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan

சமுதாயத்தில் எல்லா குழந்தைகளையும் ஒரே விதமாக வளர்ப்பது இயலாத விஷயம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். குழந்தைகளின் தன்மைக்கு ஏற்ற விதத்தில் அவர்களை வளர்க்க வேண்டும். மாஞ்செடிக்கும் ரோஜா செடிக்கும் ஒரே அளவு தண்ணீர் ஊற்ற முடியாது. இரண்டுக்குமான நீரின் தேவை அளவு வித்தியாசப்படும். அது போல் தான் குழந்தைகள், அவர்களின் தேவை ஒருவருக்கொருவர் வேறுபடும்.

அவர்கள் சிறப்பை அங்கீகரியுங்கள்:

குழந்தைகள் இல்லாதவரிடம் கேட்டால் தான் குழந்தையின் அருமை தெரியும். 100 பேருக்கு திருமண நடந்தால் அதில் 90 பேருக்கு குழந்தை பிறக்கிறது. அதனால் குழந்தைப்பேறு ஒரு சாதாரணமான விஷயம் இல்லை. குழந்தைப்பேறு இல்லாத 10 பேர் எவ்வளவு துயரப்படுகிறார்கள் என்பதை நாம் கண்களால் பார்க்கிறோம். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம். கஷ்டமில்லாமல் நமக்கு கிடைத்த குழந்தையை வளர்ப்பது அவ்வளவு பெரிய விஷயமா?இல்லை!

How to make your child as a super hero

குழந்தைகள் நமக்கு கிடைத்த வரம். அந்த வரத்தை பாதுகாப்பது நம் கடமை. அவர்கள் எந்த செயல் செய்தாலும் அவர்களை அங்கீகரியுங்கள். அவர்கள் நமது எதிர்காலத்திற்கான முதலீடுகள் இல்லை. அவர்களின் வழியில் அவர்கள் செல்ல விடுங்கள்.

அவர்கள் அவர்களாக இருக்கட்டும்:

உங்கள் எண்ணங்களை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். அவர்கள் விரும்புவதை செய்ய அனுமதி கொடுங்கள். வாழ்க்கையின் புரிதல் உங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபடும்.

நாம் செய்ய துணியாத பல செயல்களை அவர்கள் சுலபமாக செய்யலாம். இது உலகத்தின் வளர்ச்சிக்கு கூட துணை நிற்கலாம். அவர்களை உங்கள் கைகளில் பிடித்து கூட்டி செல்லாதீர். நீங்கள் அவர்கள் பின்னால் இருந்து கவனியுங்கள்.

உண்மையாக அன்பு செலுத்துங்கள்:

குழந்தைகளோடு அன்பு செலுத்துவது என்பது மக்கள் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர்கள் கேட்கும் எல்லா பொருட்களை வாங்கி தருவது, என்று கருதப்படுகிறது. இது தவறு, அவர்களுக்கு தேவையானதை அவர்களுக்கு கொடுப்பதே உண்மையான அன்பு. அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற நாம் எதையும் செய்வது தான் உண்மையான அன்பு.

அவர்கள் வளர்ச்சியை துரிதப்படுத்தாதீர்கள்:

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். அவர்களின் குழந்தை தனத்தை ரசியுங்கள். அதை விட அற்புதமான விஷயங்கள் உலகத்தில் கிடையாது. அவர்கள் வளர வளர, குழந்தைத்தனம் மாறி விடும். மீண்டும் நினைத்தால் கூட அவர்கள் குழந்தையாக மாற முடியாது.

கற்றுக்கொடுப்பதை விட, கற்றுக்கொள்வது சிறந்தது:

வாழ்க்கையில் எல்லாவற்றையும் கற்று கொடுக்க முடியாது. சில வற்றை அவர்கள் தானாகத்தான் கற்று கொள்ள வேண்டும். நமக்கும் எல்லாம் தெரியாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். நாம், நம் குழந்தைகள், இருவரில் யார் அதிக சந்தோஷமாக உள்ளார்கள்? நிச்சயமாக குழந்தைகள் தான். நம்மை விட அதிக சந்தோஷமாக இருக்க அவர்களுக்கு தெரியும் போது, வாழக்கையை பற்றிய தெளிவும், அவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்று நம்புங்கள்.

குழந்தையின் மூலமாகத்தான் நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் . குழந்தைகள் நமக்கு பல விஷயங்களை கற்று கொடுக்கிறது. நமக்கு தெரியாத பல செயல்களை அவர்களுக்காக நாம் கற்று கொள்றோம்.

ஆன்மீகத்தில் ஈடுபடுத்துங்கள்:

குழந்தைகள் இயல்பாகவே இறைத்தன்மையுடன் இருப்பார்கள். மற்றவர்கள் அல்லது மற்ற பொருட்களின் குறுக்கீடுகள் தான் , அவர்களை இறைத்தன்மையில் இருந்து விலக்கும். அது சமூகம், தொலைக்காட்சி, பள்ளி , சுற்றுப்புறம் என்று எதுவாகவும் இருக்கலாம். இத்தகைய குறுக்கீடுகள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அவர்களுக்கு மதங்களின் கொள்கைகளை பற்றிய அறிவு வளர்வது நல்லது. மதங்களின் வேறுபாடுகளை அவர்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை.

அன்பான சூழ்நிலையை உருவாக்குங்கள்:

அவர்கள் உங்களை நினைத்து பயத்துடனும் , பதற்றத்துடனும் இருந்தால் வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்க முடியாது. அதனால், அவர்களை சுற்றி அன்பு வளையத்தை ஏற்படுத்தி, ஆனந்தமாக வாழக்கையை அனுபவிக்க விடுங்கள்.

நட்பாக இருங்கள்:

அவர்கள் தலை மேல் நீங்கள் உட்கார்ந்து சவாரி செய்யாதீர்கள் . அவர்கள் முன்னாளல் நின்று பேசுங்கள். நட்போடு இருங்கள். அவர்களையும் பேச அனுமதியுங்கள்.

மரியாதையை கேட்டு பெறாதீர்கள்:

அவர்களிடம் இருந்து அன்பை மட்டும் பெற்று கொள்ளுங்கள். அவர்களை விட சில வருடம் முன்னால் நீங்கள் பிறந்திருப்பதால் அவர்களை உங்களால் அடக்கி ஆள முடியாது. அன்பை அவர்கள் தர முற்படும்போது, மரியாதையும் சேர்த்தே வரும்.

குழந்தைகளை கவருங்கள் :

குழந்தைகள் பல்வேறு பொருட்கள் மற்றும் மனிதர்களால் எளிதில் கவரப்படுவார்கள். எந்த விஷயத்தில் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களோ அதன் பின்னே போக முயற்சிப்பார்கள். இதன் விளைவுகள் சில நேரம் எதிர்மறையாகவும் மாறலாம். அதனால், அவர்களை கவர்ந்திழுப்பது பெற்றோராக இருக்கும்போது நல்ல பலன்கள் குழந்தைகளுக்கு ஏற்படும்.

அவர்கள் விரும்பும் விதத்தில் மகிழ்ச்சியாக, அறிவாளியாக, அற்புதமான மனிதராக நீங்கள் இருங்கள். நமது குழந்தைகள் நல்ல பழக்கங்களுடன் வளர வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் அன்பாகவும், அமைதியாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

Story first published: Tuesday, September 5, 2017, 13:32 [IST]
Desktop Bottom Promotion