குழந்தைக்கு சளிபிடிக்குதா? ஆஸ்துமா வராதாம் : ஆய்வில் தகவல்

By Mayura Akilan

Asthma Inhaler
பிறந்த குழந்தைக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால் அவர்களுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.

ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உள்ள பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த சபினா இல்லி என்ற மருத்துவர் தனது சக மருத்துவர்கள் உதவியுடன் 1314 குழந்தைகளை வைத்து ஆய்வு மேற்கொண்டார். அவர்களை 7 ஆண்டுகள் வரை தொடர்ந்து கண்காணித்தார்.

வைரஸ் கிருமி தாக்குதலால் ஜலதோசம் பிடித்து மூக்கில் தண்ணீர் வடியும் நிலையானது வருடத்திற்கு இரண்டு முறை ஏற்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா தாக்குதல் குறைவாக இருந்தது. முதல் வருடத்தில் ஒரு முறை மட்டுமே ஜலதோஷம் பிடித்த குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா நோயின் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜலதோசம், சளி பிடிப்பதனால் பிறந்த குழந்தைகளுக்கு தானாகவே எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டு விடுகிறது என்று தாங்கள் கருதுவதாக ஆய்வினை மேற்கொண்ட ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்படி அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா மற்றும் பிற அலர்ஜி நோய்கள் தாக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்கள் நமது உடலில் தானாக ஏற்படும் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போய்விடுவதால் ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. எனவே ஜலதோஷத்தினால் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி ஆஸ்துமா அலர்ஜி நோய்கள் ஏற்படாமல் தடுத்து விடுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Saturday, July 14, 2012, 15:28 [IST]
Desktop Bottom Promotion