குழந்தைகளின் காய்ச்சல் வலிப்பு : இரும்பு கொடுப்பது மூடநம்பிக்கை

By Mayura Akilan

Fits due to a fever
குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தலே பெரும்பாலான பெற்றோர்கள் பதற்றமடைந்து மருத்துவரிடம் எடுத்துச் செல்வது வாடிக்கை. காய்ச்சலை குறைக்கவேண்டும் என்பதற்காக மணிக்கு ஒருமுறை மருந்துகளை ஊற்றுவர். இது தேவையற்ற நடவடிக்கை என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது அவர்களின் உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்றுநோயை உணர்த்தும் தற்காப்பு ஆயுதம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையானது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிய வெப்பமானியைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். 5 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அக்குளிலில் வைத்து பார்த்து வெப்பத்தை அறிந்து கொள்ளவேண்டும். பொதுவாக 97 முதல் 99 ஃபாரன்ஹீட் வரை உள்ள வெப்பம் இயல்பானதுதான். அதற்கு மேற்பட்டு இருந்தால் மட்டுமே காய்ச்சல் என்பதை உணரலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே அளிக்கவேண்டும்.

லேசான துணிகள்

காய்ச்சல் நேரத்தில் குழந்தைகளின் உடலில் கனமாக உடைகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு லோசான ஆடைகளை அணிவிக்கவேண்டும். உடல் சூடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் மெல்லிய துணியை நனைத்து ஒத்தடம் தரலாம். இவ்வாறு செய்வது குழந்தையின் காய்ச்சலை குறைக்கும்.

வலிப்பு நோய்

சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகிவிட்டால் வலிப்பு ஏற்படுவது இயல்பு. இந்த வலிப்பு 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. இந்த சமயத்தில் பெற்றோர்கள் பதற்றமடையாமல் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்லவேண்டும். வலிப்பு நேரத்தில் இரும்பினையோ, சாவிக்கொத்தினையோ கொடுப்பது மூட நம்பிக்கை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிப்பு வரும் சமயத்தில் குழந்தையை சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பதை விட உடனடியாக காற்று வருமாறு விலகி நிற்க வேண்டும். பின்னர் குழந்தை நாக்கை கடித்துக்கொள்ளாமல் இருக்க அதன் வாயில் பற்களின் இடையே உறுதியான பிளாஸ்டிக் துண்டினை வைக்கவேண்டும். சற்று ரிலாக்ஸ் செய்து விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது நலம் அளிக்கும்.

Story first published: Saturday, February 25, 2012, 13:49 [IST]
Desktop Bottom Promotion