புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் உடல் பருமனாகும் : ஆய்வில் தகவல்

By Mayura Akilan

Obesity and the Baby Bottle
நர்சரி பள்ளி செல்லும் பருவம் வந்த பின்னரும் புட்டிப்பால் பருகும் குழந்தைகள் உடல் பருமனாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு ஒரு வயது முடிந்தவுடனே புட்டிப்பாலை மறக்கடிக்க வேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவு தாய்பால்தான். 6 மாதங்கள் தாய்பால் கொடுத்த பின்னர் அவர்களின் வளர்ச்சி கருதி பிற உணவுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னர் பசும்பாலை பாட்டிலில் ஊற்றி பருகக் கொடுக்கின்றனர். புட்டிப்பாலுக்கு பழகிய குழந்தைகள் எங்கு சென்றாலும் அடையாளமாக அந்த புட்டிப்பாலையே கேட்பர். இரண்டு வயது கடந்த பின்னரும் நர்சரி பள்ளிக்கு செல்லும் போது கூட டம்ளரை தவிர்த்து விட்டு புட்டிப்பாலையே கேட்டு அடம் பிடிக்கும் குழந்தைகளும் உண்டு. எனவே இரண்டு வயதை கடந்த பிறகும் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் 5 வயதுக்கு பிறகு குண்டாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவயது குழந்தைகளின் உடல் பருமன் குறித்து அமெரிக்காவின் டெம்பிள் யுனிவர்சிட்டியில் பொது சுகாதாரம் என்ற தலைப்பில் ரச்சல் கூஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர். 6,750 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்ட அவை,

உடல் பருமன்

ஆய்வில் பங்கேற்றவர்களில் 5ல் 1 குழந்தை 2 வயதான பிறகும் பாட்டிலில் பால் குடிப்பதும், இப்படி நீண்ட காலம் புட்டி பால் குடிப்பவர்களில் 5ல் ஒரு குழந்தையின் உடல் 5 வயதுக்குப் பிறகு பருமானாவதும் தெரியவந்தது. அதேநேரம், 1 வயதுக்குப் பிறகு பாட்டில் பழக்கத்தை கைவிட்ட 6ல் ஒரு குழந்தை மட்டுமே குண்டாவது உறுதி செய்யப்பட்டது.

8 அவுன்ஸ் அளவுள்ள பாட்டிலில் பாலை பருகும் குழந்தைகளுக்கு 150 கலோரிகள் வரை கிடைக்கின்றன. இரண்டு வயதிற்கு மேற்பட்ட பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பாட்டிலில் பாலை குடிப்பதால் அதிக கலோரி உடலுக்கு கிடைப்பதோடு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டம்ளரில் பழக்கப்படுத்தவும்

இதன் மூலம் நீண்ட காலம் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளில் 33 சதவீதம் பேருக்கு உடல் பருமனாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, 2 வயதுக்கு முன்பாக பாட்டில் பழக்கத்தை நிறுத்தி விடுவது நல்லது என கூஸ் தெரிவித்துள்ளார். அதனால்தான் நம் ஊர் பாட்டிகள் குழந்தைகள் நடக்கப் பழகும் முன் தாய்ப்பாலை நிறுத்தவேண்டும் எனவும், பள்ளிக்கு போகும் முன் பாட்டில் பாலை மறக்கச் செய்யவேண்டும் என்றும் கூறுவார்கள். எனவே குழந்தைகளுக்கு பல் முளைக்கத் தொடங்கிய உடனே டம்பளரில் தண்ணீர், பால் போன்றவற்றை பருகக் கொடுப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

Story first published: Thursday, February 16, 2012, 17:35 [IST]
Desktop Bottom Promotion