மாத்திரை அட்டைகளில் இந்த சிவப்பு நிற கோட்டை கவனிச்சுருக்கீங்களா? இது ஏன் இருக்கு-ன்னு தெரியுமா?

Red Line On Packets Of Medicine In Tamil: இன்று நிறைய பேர் தினமும் ஏராளமான மாத்திரைகளை போடுகிறோம். அதில் பலர் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை போடுவார்கள். இன்னும் சிலர் மருத்துவரிடம் ஆலோசிக்காமலேயே மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். பொதுவாக மாத்திரைகளை வாங்கும் போது, முதலில் அந்த மருந்து மாத்திரையின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குவோம்.

ஆனால் அப்படி வாங்கும் ஒருசில மாத்திரை அட்டையின் பின் சிவப்பு நிற கோட்டை கவனித்திருக்கமாட்டோம். அப்படியே கவனித்திருந்தாலும், அது ஒரு டிசைன் என்று விட்டுவிடுவோம். ஆனால் மாத்திரை அட்டையின் பின் உள்ள சிவப்பு நிற கோடு அந்த மருந்து பற்றிய முக்கியமான செய்தியை தெரிவிக்கிறது என்று தெரியுமா?

Why Do Some Medicines Have A Red Line On Them In Tamil

அது என்னவெனில் இந்த மாதிரியான மாத்திரைகளை மருத்துவரின் வழிகாட்டுதலின்றி எடுக்கக்கூடாது என்பதாகும். எப்போதுமே எந்த ஒரு மருந்தையும் மருத்துவரின் அறிவுறுத்தலின்றி எடுத்தால், சில சமயங்களில் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும், சிலர் ஒருமுறை ஒரு பிரச்சனைக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை, அடுத்தமுறை அந்த பிரச்சனையை சந்திக்கும் போது, மருத்துவரிடம் செல்லாமல், அவர் முன்பே பரிந்துரைத்ததை வாங்கி உட்கொள்வோம். ஆனால் இது முற்றிலும் தவறான செயல் மற்றும் ஆபத்தானதும் கூட.

இந்த சிக்கலைத் தவிர்க்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் மருந்து மாத்திரைகளின் பின் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விவரத்திற்கு கவனத்தை செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. மேலும் குறிப்பிட்ட மருந்துகளுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட்டால் மட்டுமே மருந்துகளை மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கலாம். ஆனால் இந்த மாதிரியான மருந்துகளின் மீது தான் சிவப்பு நிற கோடு இருக்கும். அப்படியென்றால் இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது என சுகாதார அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆகவே எப்போதும் மருந்து மாத்திரைகளின் காலாவதி தேதியை கவனிக்கும் போது, அதில் சிவப்பு நிற கோடு உள்ளதா என்பதையும் கவனியுங்கள். சொந்தமாகவோ அல்லது மருந்து கடையில் உள்ளவரின் ஆலோசனையின் பேரிலோ எந்த மருந்தையும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சிவப்பு கோடு கொண்ட மருந்தை உட்கொள்ளும் முன் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Story first published: Monday, March 11, 2024, 19:01 [IST]
Desktop Bottom Promotion