தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க?

தமிழ் சினிமாவில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் சில படங்கள் மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த 'தாய் கிழவி' திரைப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த பெரிய பட்ஜெட் படங்களை விட 'தாய் கிழவி' திரைப்படத்தின் வசூல் அதிகமாகும்.

Sivakarthikeyan Gifts Brand-New Mahindra BE6 to Thaai Kizhavi Director Sivakumar Murugesan

இந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். தற்போது 'தாய் கிழவி' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை மேலும் சிறப்பிக்கும் விதமாக, நடிகர்-தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்குப் புத்தம் புதிய மஹிந்திரா BE 6 எலக்ட்ரிக் எஸ்.யு.வி (SUV) காரைப் பரிசளித்துள்ளார்.

திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து, 2026- ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இப்படத்திற்குப் பேராதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. வெற்றி விழாவில் ரசிகர்களின் உற்சாகக் கைத்தட்டல்களுக்கு மத்தியில் இயக்குனர் இந்த ஆடம்பரக் காரை பெற்றுக்கொண்டார், இது படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Sivakarthikeyan Gifts Brand-New Mahindra BE6 to Thaai Kizhavi Director Sivakumar Murugesan

தாய் கிழவி திரைப்படம்

ராதிகாசரத்குமார் நடிப்பில், நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் 'தாய் கிழவி'. இப்படத்தில் அருள் தாஸ், சிங்கம்புலி, பாலா சரவணன் மற்றும் ரேச்சல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிவகுமார் முருகேசன் இயக்கிய இப்படம், அதன் உணர்வுப்பூர்வமான கதைக்களத்திற்காகவும், பெண் சுதந்திரம் பற்றிய வலிமையான கருத்துக்காகவும் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியதுடன், உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்து வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதற்காக, இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு 'மஹிந்திரா BE 6' ரக எலக்ட்ரிக் எஸ்.யு.வி காரைப் பரிசளித்து சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்; இக்காரின் மதிப்பு 18 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவகுமார் முருகேசனுக்கான அங்கீகாரம்

'தாய் கிழவி' படத்தின் மிகப்பெரிய வெற்றி, தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்களில் ஒருவராகச் சிவகுமார் முருகேசனை மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் எழுத்தாளரான இவர், இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பே அப்படம் மூலம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார். உணர்வுபூர்வமான கருப்பொருளை காமெடி கலந்து திரைக்கதை எழுதி, 'தாய் கிழவி' படத்தின் மூலம் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான ஒரு படைப்பை அவர் வழங்கியுள்ளார். திரைத்துறை சார்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டியதுடன், இதன் திரைக்கதை, நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான ஆழம் ஆகியவற்றையும் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.

சிவர்கார்த்திகேயன்-சிவகுமார் முருகேசன் மீண்டும் இணைகிறார்கள்

தயாரிப்பு-இயக்கத்தில் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் முருகேசன் ஆகியோர் 'சேயோன்' என்ற தங்கள் அடுத்த படத்திற்காக கதாநாயகன்-இயக்குனராக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, சிவகுமார் மீண்டும் இயக்குநராகப் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படம் முடிந்த பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் சிவகுமாருடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Thursday, July 9, 2026, 11:39 [IST]
Desktop Bottom Promotion